ஹரப்பா பண்பாடு அதன் தனிச்சிறப்பு வாய்ந்த நகர அமைப்புக்கு பெயர் பெற்றதாகும். தெருக்கள் ஒவ்வொன்றும் குறுக்கு நெடுக்காகவும் நேர்கோட்டிலும் அமைந்திருந்தன, ஹரப்பா, மொகஞ்சாதாரோ, காளிபங்கன் போன்ற பெரிய நகரங்களில் மேடான பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. கோட்டைகள் ஒவ்வொன்றும் களிமண்கற்களாலான மேடுகள்மீது அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் கீழ்ப்பகுதியிலிருந்த நகரத்தில் செங்கற்களாலான வீடுகள் இருந்தன. இவற்றில் சாதாரணமக்கள் குடியிருந்தனர். பெரும்பாலான கட்டிடங்கள் அனைத்தும் செங்கற்களாலானவை. கற்பாறைகளாலான கட்டிடங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர்க் குழாய்கள் ஹரப்பா பண்பாட்டின் மற்றொரு சிறப்புக் கூறாகும். வீடுகளிளிருந்து வெளிவரும் கழிவுநீர்க் குழாய்கள் அனைத்தும் தெருக்களின் கழிவுநீர்ப்பாதையுடன் இணைக்கப்பட்டிருந்தன. இக்குழாய்கள் பெரும்பாறைக் கற்களாலோ அல்லது செங்கற்களாலோ மூடப்பட்டிருந்தன.
மொகஞ்சாதாரோ குளியல் குளம்
மொகஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் பெரும் குளியல் குளமாகும். இது 39 அடி நீளமும், 23 அடி அகலமும், 8 அடி ஆழமும் கொண்டதாகும் . தரையிலிருந்து குளத்திற்குள் இறங்க அனைத்து பக்கத்திலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. உடைகள் மாற்றுவதற்கு ஏதுவாக குளத்தின் ஓரங்களில் தனி அறைகள் காணப்படுகின்றன. குளியல் குளத்தின் தரைப்பகுதி செங்கற்களாலானது. அருகிலிருந்த பெரிய கிணற்றிலிருந்து குளத்திற்கு தண்ணிர் கொண்டுவரப்பட்டது. குளத்தின் ஒரு மூலையில் தண்ணிரை வெளியேற்றும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப் பட்டிருத்தல் வேண்டும். மொகஞ்சாதாரோவின் மிகப்பெரிய கட்டிடம் அதன் தானியக் களஞ்சியமாகும். இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது. ஹரப்பா நகரின் கோட்டையில் ஆறு தானியக் களஞ்சியங்களைக் காணமுடிகிறது.