ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலையில் மக்கள் சமவெளிகளில் பெரும் கிராமங்களை உருவாக்கி அங்கு வாழ்ந்தனர். இக்காலத்தில்தான் சிந்து சமவெளியில் நகரங்கள் தோன்றி வளரத் தொடங்கின. கிராமப்புற வாழ்க்கையிலிருந்து மக்கள் நகரவாழ்க்கையையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆம்ரி, கோட் டிஜி ஆகிய இடங்களை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஹரப்பா பண்பாட்டின் உச்சகட்டத்தில் பெரிய நகரங்கள் எழுச்சிபெற்றன. காளிபங்கன் அகழ்வாய்வுகள் அங்கிருந்த நகர அமைப்புகளையும் நகர்ப்புறக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
ஹரப்பா பண்பாட்டின் இறுதிநிலையில் அதன் சிதைவு தொடங்கியது. லோத்தல் அகழ்வாய்வுகள் இந்த நிலைக்கு தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. லோத்தல் நகரமும் அதன் துறைமுகமும் மிகவும் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டன. வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய தடுப்புச்சுவரை இந்நகரில் காணமுடிகிறது. மெசபடோமியா, இந்தியாவின் பிறபகுதிகள் ஆகியவற்றுக்கிடையிலான மிகப்பெரிய வாணிப மையமாக லோத்தல் திகழ்ந்தது.
ஹரப்பா பண்பாட்டின் காலம்
ஹரப்பா முத்திரை
1931 ஆம் ஆண்டு சர் ஜான் மார்ஷல் மொகஞ்சாதாரோவின் காலத்தை கி.மு.3250 கி.மு.3250 என மதிப்பிட்டார். பின்னர், பல்வேறு புதிய இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, புதிய தகவல்களின் அடிப்படையில் ஹரப்பா பண்பாட்டின் காலமும் அவ்வப்போது அறிஞர்களால் புதியதாக மதிப்பிடப்பட்டது. ரேடியோ கார்பன் முறையில் காலத்தை கணக்கெடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஓரளவுக்கு துல்லியமான காலக்கணிப்பும் செய்யப்பட்டது. 1956 ஆம் ஆண்டு ஃபேர்சர்வ்ஸ் என்பவர் ஹரப்பா பண்பாட்டின் காலத்தை கி.மு-2000 கி.மு.1500 என்று மதிப்பிட்டார். 1964 ஆம் ஆண்டு டி.பி. அகர்லால் இந்த பண்பாட்டின் காலத்தை கி.மு.2300 கி.மு. 1750 என முடிவு செய்தார். இருப்பினும் வருங்காலத்தில் இந்த காலவரையரையும் மாறுவதற்கு வாய்ப்புண்டு.