அதிகாரம் 12
2 ஆனால், முன்பே ஓடிப்போனவர்களான திமோத்தேயுஸ், ஜென்னேயுஸ் புதல்வன் அப்பொல்லோனியுஸ், இன்னும் எரோணிமுஸ், தேமோபோன், சிப்ருஸ் நாட்டு ஆளுநனான நிக்கோனோர் ஆகியோர் அவர்களை அமைதியிலும் சமாதானத்திலும் இருக்க விட்டாரல்லர்.
3 யோப்பா நகரத்தார் ஒரு மாபெரும் துரோகம் புரிந்தனர். தங்களுக்குள் யாதொரு பகையுமில்லாதவர்கள் போல, தாங்கள் தயார் செய்திருந்த படகுகளில் தங்களோடு வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை அவர்கள் மனைவி மக்களோடு ஏறும் படி கேட்டுக் கொண்டார்கள்.
4 இவ்வேற்பாடு நகர மக்கள் அனைவரின் இசைவுடன் செய்யப்பட்டது. யூதரும் சமாதானத்தின் பொருட்டு அதற்குச் சம்மதித்து, யாதொரு ஐயப்பாடும் கொள்ளவில்லை. ஆழத்திற்குச் சென்ற போது நகரத்தார், இருநூறு பேர்களுக்குக் குறையாமல் அவர்களைத் தண்ணீரில் அமிழ்த்தி விட்டார்கள்.
5 தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமையை யூதாஸ் கேள்விப்பட்டபோது, தம்முடன் இருந்தவர்களுக்குக் கட்டளை கொடுத்து, நேர்மையான நீதிபதியாகிய கடவுளை மன்றாடி,
6 தம் சகோதரருடைய கொலைஞரை எதிர்த்து வந்து, இரவுவேளையில் துறைமுகத்தைக் கொளுத்தி, படகுகளைச் சுட்டெரித்து, நெருப்புக்குத் தப்பி ஓடினவர்களை வாளுக்கு இரையாக்கினார்.
7 இவ்வாறு செய்த பிறகு, அவர் திரும்பி வந்து யோப்பா நகரத்தார் அனைவரையும் அழித்து விடுவதாகத் திட்டமிட்டுப் போய்விட்டார்.
8 ஆனால், தங்களோடு வாழ்ந்து வந்த யூதருக்கும் அவ்விதமே செய்ய யாம்னியாவில் இருந்தவர்களும் எண்ணம் கொண்டார்களென்று அவர் அறிந்த போது,
9 இரவுவேளையில் யாம்னியா நகரத்தாரிடம் சென்று, துறைமுகத்தையும் கப்பல்களையும் கொளுத்தி விட்டார். அந்த வெளிச்சம் இருநூற்று நாற்பது பர்லாங்கு தூரத்திலிருந்த யெருசலேமில் காணப்பட்டது.
10 அவர் அவ்விடமிருந்து புறப்பட்டு ஒன்பது பர்லாங்கு போய்த் திமோத்தேயுசை எதிர்க்கச் செல்கையில், ஐயாயிரம் காலாட் படையினரும், ஐந்நூறு குதிரை வீரரும் கொண்ட அராபியர் அவரோடு போர் செய்தார்கள்.
11 சண்டை வலுத்து, கடவுள் உதவியால் அவருக்கு வெற்றி ஏற்பட்டபோது, வெல்லப்பட்டு மீதியாய் இருந்த அராபியர்கள், தாங்கள் மேய்ச்சலுக்கு இடம் கொடுப்பதாகவும் மற்றக் காரியங்களில் உதவுவதாகவும் வாக்குறுதி கொடுத்து, தங்களுடன் நட்புறவு கொள்ளும்படி யூதாசைக் கேட்டுக் கொண்டார்கள்.
12 பல காரியங்களில் உதவியாய் இருப்பார்களென்று யூதாஸ் எண்ணி, அவர்களோடு சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். உடன்படிக்கை செய்யப்பட்ட பிறகு அவர்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.
13 பாலங்களாலும் மதில்களாலும் சூழப்பட்டுப் பல இனத்தார் கலந்து வாழ்ந்து வந்த காஸ்பின் என்னும் பெயர் கொண்ட வலிமை மிக்க ஒரு நகரத்தையும் அவர் தாக்கினார்.
14 உள்ளியிருந்தவர்கள் மதில்களின் வலிமையையும், சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் நம்பி, (தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில்) கவனமில்லாமல் இருந்து, யூதாசை நிந்தித்து, கடவுளைப் பழித்துத் தகாதவைகளைப் பேசினார்கள்.
15 யோசுவா காலத்தில் இடிக்கும் ஆயுதங்களும் பொறிகளும் இல்லாமல் யெரிக்கோ நகரத்தை விழச்செய்த உன்னதராகிய உலக அரசரை மன்றாடி, மக்கபேயுஸ் சுவர்களைக் கடுமையாகத் தாக்கினார்.
16 ஆண்டவருடைய திருவுளத்தால் நகர் பிடிபட்டபோது எண்ணிலிடங்காத பேர்களைக் கொன்றார். அடுத்து இருந்த இரண்டு பர்லாங்கு அகலமுள்ள குளம் கொலையுண்டோரின் இரத்தத்தால் நிறைந்தது போலத் தோன்றியது.
17 அவர்கள் அவ்விடமிருந்து எழுநூற்றைம்பது பர்லாங்கு நடந்து, துபியானர் எனப்பட்ட யூதரிடம் காராக்காவில் வந்து சேர்ந்தார்கள்.
18 ஆயினும், அவ்விடங்களில் திமோத்தேயுசைக் காண முடியவில்லை. திமோத்தேயுஸ் யாதொரு காரியமும் முடிக்காமல், ஓர் இடத்தில் மட்டும் வலிமை மிக்க சேனைகளை வைத்து விட்டுத் திரும்பிப் போய் விட்டான்.
19 மக்கபேயுசின் படைத்தவைர்களாய் இருந்த தோசித்தேயுஸ், சோசிப்பாத்தர் என்பவர்கள் திமோத்தேயுசால் கோட்டையில் விடப்பட்டிருந்த பதினாயிரம் பேர்களைக் கொன்றார்கள்.
20 மக்கபேயுஸ் தம் ஆறாயிரம் வீரர்களை அணியணியாக வகுத்துக் கொண்டு, இலட்சத்து இருபதினாயிரம் காலாட்களும் இரண்டாயிரத்தைநூறு குதிரை வீரரும் சேர்த்து வைத்திருந்த திமோத்தேயுஸ் மீது படையெடுத்துப் போனார்.
21 திமோத்தேயுஸ் யூதாசின் வருகையை அறிந்து, பெண்களையும் பிள்ளைகளையும் மற்றப் பொருட்களையும் கார்னியோன் என்ற கோட்டைக்கு அனுப்பி விட்டான். ஏனென்றால், அந்த இடம் பாதைகளின் ஒடுக்கத்தால் பிடிபடக் கூடாததும், நெருங்குவதற்கு அரிதானதுமாய் இருந்தது.
22 யூதாசின் சேனை முதலில் காணப்பட்ட போதே, அனைத்தையும் காணும் கடவுள் (அவர்களோடு) இருந்ததால் பகைவர்களின் மனத்தில் பயம் தோன்றவே, ஒருவரொருவரை விட்டு ஓட்டம் பிடித்தார்கள்@ தம்மவர்களாலேயே விழத்தாட்டப்பட்டார்கள்@
23 யூதாஸ் வேகமாய்ப் பகைவரைப் பின்தொடர்ந்து, தண்டிக்கும் வகையில் அவர்களில் முப்பதினாயிரம் பேர்களைக் கொன்றார்.
24 தோசித்தேயுஸ், சோசிப்பாத்தர் இவர்களிடம் திமோத்தேயுஸ் அகப்பட்டான்@ ஆனால், யூதரில் பலருடைய தந்தையரும் சகோதரரும் தன்னிடம் இருந்த படியால், தன் சாவினால் அவர்கள் தங்கள் பாதுகாப்பின் நன்மையை இழக்க நேரிடும் என்ற காரணம் காட்டி, தன்னை உயிரோடு விட்டு விட வேண்டுமென்று கெஞ்சி மன்றாடினான்.
25 தான் ஒப்புக்கொண்டபடி அவர்களை விட்டு விடுவதாக அவன் உறுதியான வாக்குக் கொடுத்த பிறகு, அவர்கள் தங்கள் சகோதரருடைய பாதுகாப்பை முன்னிட்டு அவனுக்கு யாதொரு பொல்லாப்பும் செய்யாமல் விட்டு விட்டார்கள்.
26 யூதாசோ கார்னியோன் சென்று, அவ்விடத்தில் இருபத்தையாயிரம் பேர்களைக் கொன்றார்.
27 இவர்களில் சிலர் ஓடிப்போன பிறகும், பலரைக் கொன்ற பிறகும், பல இனத்தார் சேர்ந்து வாழ்ந்த வலிமை மிக்க எப்ரோன் நகருக்குப் படைகளை நடத்தினார். வீரமிக்க இளைஞர் மதில் ஓரமாய் நின்று கொண்டு துணிவுடன் எதித்தார்கள். அந்நகரில் பலவகைப் பொறிகளும் அம்புகளும் மிகுதியாக இருந்தன.
28 தமது வல்லமையினால் பகைவர்களின் வலிமையை ஒடுக்கிய எல்லாம் வல்லவரை மன்றாடின பிறகு, அவர்கள் நகரத்தைப் பிடித்தார்கள்@ அதில் இருந்தவர்களில் இருபத்தையாயிரம் பேர்களைக் கொன்றார்கள்.
29 அவர்கள் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு யெருசலேமுக்கு அறுபது பர்லாங்கு தூரமுள்ள சீத்தியருடைய நகரம் சென்றார்கள்.
30 சீத்தாப்போலியாவில் இருந்த யூதர் தாங்கள் அந்நகரத்தாரால் அன்புடன் நடத்தப்பட்டதாகவும், துன்ப காலத்தில் முதலாய்த் தங்கள் பால் கண்ணியமாய் நடந்து கொண்டார்களென்றும் அவர்களுக்காகப் பரிந்து பேசினமையால்,
31 அவர்களுக்கு நன்றி வார்த்தைகளைச் சொல்லி, இனி மேலும் தங்கள் இனத்தார் மேல் அன்புடனிருக்கும் படி கேட்டுக் கொண்டு, பெரியவாரத் திருநாள் நெருங்கியமையால் யெருசலேம் வந்தார்கள்.
32 ஐம்பதாம் திருநாளுக்குப் பிறகு அவர்கள் இதுமேயா நாட்டுத் தலைவனாகிய கோர்ஜியாசுக்கு எதிராகச் சென்றார்கள்.
33 மூவாயிரம் காலாட்களோடும், நானூறு குதிரைவீரரோடும் யூதாஸ் புறப்பட்டார்.
34 கைகலந்து போர் செய்யவே, யூதரில் சிலர் கொலையுண்டார்கள்.
35 பாசேனோரைச் சேர்ந்தவர்களில் தோசித்தேயுஸ் எனும் வீரம் செறிந்த ஒரு குதிரை வீரன் கோர்ஜியாசைப் பிடித்துக் கொண்டான். அவனை உயிரோடு பிடிக்க முயன்ற போது, திராசியரில் ஒரு குதிரை வீரன் அவன் மேல் பாய்ந்து அவன் தோளை வெட்டினான். ஆதலால், கோர்ஜியாஸ் தப்பி மாரேசாவுக்கு ஓடினான்.
36 எஸ்திரிசுடன் இருந்தவர்கள் நீண்ட நேரம் போர் செய்து களைப்புற்றிருந்ததால், போரில் துணைவரும் தலைவருமாயிருக்க ஆண்டவரை யூதாஸ் மன்றாடினார்.
37 தம் தாய்மொழியில் ஆரம்பித்து, இன்னிசைகளை உரத்த குரலில் பாடி, கோர்ஜியாசின் படைகள் ஓட்டம் பிடிக்கும் படி செய்தார்.
38 பின்பு யூதாஸ் தம் படைகளைச் சேர்த்துக் கொண்டு ஓதோல்லா நகர் சேர்ந்தார், ஏழாம் நாள் வந்த போது அவர்கள் வழக்கப்படி தங்களையே தூய்மைப்படுத்திக் கொண்டு அவ்விடத்தில் ஓய்வு நாளைக் கொண்டாடினார்கள்.
39 போரில் மாண்டவர்களுடைய பிணங்களை எடுத்து, அவர்களுடைய தந்தையரோடு அவர்கள் முன்னோரின் கல்லறைகளில் வைக்கும்படி மறுநாள் யூதாஸ் தம்முடையவர்களோடு வந்தார்.
40 ஆனால், கொலையுண்டவர்களுடைய ஆடைகளுக்குள் கட்டளையினால் யூதருக்கு விலக்கப்பட்டிருந்ததும், யாம்னியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதுமான சிலைகளின் சின்னங்களைக் கண்டார்கள். ஆதலால், இதனால் தான் அவர்கள் போரில் விழுந்ததார்களென்று அனைவருக்கும் தெரிய வந்தது.
41 ஆகையால், மறைவான பொருளை வெளிப்படுத்தின ஆண்டவருடைய நீதித்தீர்ப்பை எல்லாரும் வாழ்த்தினார்கள்.
42 அன்றியும், ஆண்டவரை மன்றாடத் தொடங்கி, செய்த குற்றத்தை மறந்துவிடும்படி அவரை வேண்டிக் கொண்டார்கள். கொலையுண்டவர்களின் பாவங்களை முன்னிட்டு நிகழ்ந்தவைகளைக் கண்ணால் கண்ட மக்களை நோக்கி, பாவத்தினின்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும்படி அவர்களுக்கு வீரமிக்க யூதாஸ் அறிவுரை கூறினார்.
43 உயிர்த்தெழுதலை நன்றாகவும் பக்தியோடும் நினைவுகூர்ந்து, பணம் தண்டி, பன்னீராயிரம் வெள்ளித் திராக்மாக்களை இறந்தவர்களுடைய பாவங்களுக்காகப் பலி ஒப்புக்கொடுக்கும்படி யெருசலேமுக்கு அனுப்பினார்.
44 (ஏனென்றால், இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை அவர் நம்பியிருந்தாலன்றி, மற்றபடி அவர் செய்தது தேவையற்றதும், இறந்தோருக்காக மன்றாடுவது வீணானதுமாய் இருக்கும்).
45 அன்றியும், விசவாசத்தோடு இறந்தவர்கள் இரக்கத்தைப் பெறுவார்களென்றும் அவர் எண்ணியிருந்தார்.
46 ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது.