பழங்காலத்திலேயே இந்த ஒற்றுமைக்கான விதை ஊன்றப்பட்டது. பரந்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரே நாடு என்ற உணர்வு மேலோங்கியிருந்தது. பரதர் என்ற பழங்குடிரினரின் பெயரால் இத்துணைக் கண்டம் பாரத வர்ஷம் என்றே குறிக்கப்பட்டு வந்தது. பண்டைய கவிஞர்களும், தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும் இந்நிலப்பகுதியை ஒன்றுபட்ட தேசமாகவே கருதிவந்தனர். மௌரியர் மற்றும் குப்தப் பேரரசுகளின் காலத்தில அத்தகைய அரசியல் ஒற்றுமை ஏற்பட்டதையும் இந்திய வரலாறு எடுத்துக் கூறுகிறது.
அயல்நாட்டவரும் இந்நிலப்பகுதியை ஒரே நாடாகவே கருதி வந்தனர். ஹிந்த்' என்ற பெயர் சிந்து என்ற நதியின்' பெயரிலிருந்தே பெறப்பட்டது. அயலவர்கள் முதன் முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும் பகுதி என்பதால் இத்துணைக் கண்டத்தை 'சிந்து' என்றே அழைத்தனர். பின்னர் அது கிரேக்கர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் 'ஹிந்த்' என்றே குறிக்கப்படுகிறது.
மொழி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் பண்டைக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நாட்டின் பொது மொழியாக பிராகிருதம் விளங்கியது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுக்கலில் பிராகிரத மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியன நாடு முழுவதும் பரவலாக படிக்கப்பட்டன. வடமொழி இலக்கியங்களான இவையிரண்டும் பல்வேறு இந்திய மொழிகளிலும்,எழுதப்பட்டன.
இந்தியப் பண்பாட்டு விழுமியங்களும் கருத்துக்களும் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தபோதிலும், அடிப்படையில் அவை ஒரு கருத்தையே உணர்த்துவதாக இருந்தது.
இவ்வாறு இந்தியா இன்று பல்வேறு சமயங்களையுடைய சமுதாயமாக மலர்ந்துள்ளது. பன்முகப் பண்பாட்டைப் போற்றும் சமுதாயமாக எழுச்சி பெற்றுத் திகழ்கிறது. இருப்பினும் அடிப்படையில் காணப்படும் ஒற்றுமையுணர்வும், இந்திய சமுதாயத்தின் பன்முகத்தன்மையுமே அதன் ஒப்பற்ற வலிமைகளாகத் திகழ்கின்றன. வருங்கால வளர்ச்சிக்கும் அவை வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.