வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் கோடாக அமைந்திருப்பவை விந்திய சாத்பூரா மலைகளும், நர்மதை, தபதி ஆறுகளுமேயாகும். விந்திய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி தக்காணப் பீடபூமி என்று அழைக்கப்படுகிறது. எரிமலைப் பாறைகளாலான இது வடஇந்திய மலைகளிடமிருந்து வேறுபட்டதாகும். இப்பாறைகள் செதுக்குவதற்கு எளிதாக இருப்பதனால் தக்காணப்பகுதியில் குடைவரைக் கோயில்களும் மடாலயங்களும் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தக்காணப் பீடபூமி |
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜின்னார், கன்ஹேரி, கார்வே போன்ற கணவாய்கள் உள்ளன. மேற்கிலுள்ள துறைமுகங்களை இணைக்கும் வணிகவழித் தடங்களாக இவை விளங்கின. வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் தக்காணப் பீடபூமி ஒரு பாலம் போல செயல்பட்டது. இருப்பினும், விந்திய மலைகளிலுள்ள அடர்ந்த காடுகள் இப்பகுதியை வடக்கிலிருந்து தனிமைப்படுத்துவதாக அமைந்திருந்தன, எனவே, தென்னிந்திய தீபகற்பத்தின் மொழியும் பண்பாடும் நெடுங்காலமாக அவற்றின் தனித்தன்மை மாறாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
தென்கோடியில் புகழ்பெற்ற பாலக்காட்டுக் கணவாய் உள்ளது. காவிரிப்பள்ளத்தாக்கையும், மலபார் கடற்கரையையும் இணைக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மனலயின் குறுக்கே இது அமைந்துள்ளது- பண்டைக் காலத்தில் இந்தோரோமானிய வர்த்தகத்திற்கான முக்கிய வழித்தடமாக பாலக்காட்டுக் கணவாய் விளங்கியது. தென்னிந்திய தீபகற்பத்தின் மிகவுயர்ந்த மலைச்சிகரம் ஆனைமுடி என்பதாகும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மற்றொரு உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அவ்வளவு உயரமானவையல்ல, மேலும், இவற்றில் காணப்படும் இடைவெளிகள் மூலமாகத்தான் பல ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அரிக்கமேடு, மாமல்லபுரம், காவேரிப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்கள் சோழ மண்டலக் கட்ற்கரையில்தான் இருந்தன.