அதிகாரம் 14
2 இவ்வாறு நூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் நினிவே நகரில் சிறப்பாய் அடக்கம் செய்யப்பட்டார்.
3 அவர் தம் ஐம்பத்தாறாம் வயதில் பார்வை இழந்து, அறுபதாம் வயதில் மறுபடியும் பார்வை அடைந்திருந்தார்.
4 அவரது வாழ்வின் எஞ்சிய ஆண்டுகளோ மகிழ்ச்சி நிறை ஆண்டுகளாய் இருந்தன. அவர் தெய்வ பயம் நிறைந்தவராய் வாழ்ந்து வந்திருந்ததனால் சமாதானமாய் இறந்தார்.
5 சாகும் வேளையில் அவர் தம் மகன் தோபியையும், அவனுடைய புதல்வரும் தம் பேரர்களுமான ஏழு இளைஞர்களையும் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, "நினிவேயின் அழிவு விரைவில் வரும்.
6 ஏனெனில், ஆண்டவரது வாக்கு நிறைவுறும். அப்பொழுது இஸ்ராயேல் நாட்டினின்று சிதறடிக்கப்பட்டுள்ள நம் சகோதரர்கள் திரும்பவும் அங்குப் போய்ச் சேர்வார்கள்.
7 பாலைவனம் முழுவதிலும் மக்கள் குடியேறி வாழ்வார்கள். அங்கே தீக்கு இரையான ஆண்டவரின் ஆலயம் மறுபடியும் கட்டி எழுப்பப்படும். ஆண்டவருக்கு அஞ்சும் அனைவரும் அவ்விடத்திற்குத் திரும்பிப் போவார்கள்.
8 புறவினத்தாரும் தங்கள் சிலைகளைக் கைவிட்டு யெருசலேமில் குடியேறி வாழ்வார்கள்.
9 மண்ணின் எல்லா மன்னர்களும் இஸ்ராயேல் அரசரை வழிபட்டு யெருசலேமில் மகிழ்ந்திருப்பார்கள்.
10 ஆகையால் என் மக்களே, உங்கள் தந்தையின் சொற்களைக் கேளுங்கள்: உண்மை வழி நின்று ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவருக்கு விருப்பமானதையே செய்ய முயலுங்கள்.
11 உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை புகட்டி நீதிவழி நடந்து தானம் செய்யவும், கடவுளை நினைத்து என்றென்றும் உண்மையோடும் முழு ஆற்றலோடும் அவரைப் போற்றவும் வேண்டும் என்று எச்சரித்து வையுங்கள்.
12 இறுதியாக, என் சொல்லுக்குச் செவி கொடுங்கள்: இங்குத் தங்காதீர்கள். நீங்கள் உங்கள் அன்னையை என் அருகில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்த உடனே தாமதம் செய்யாது இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள்.
13 ஏனெனில், இந்த நகர் தன் தீச்செயல்களினாலேயே அழியும் என்று நான் அறிவேன்" என்றார்.
14 தாய் இறந்த பின் தோபி தன் மனைவியுடனும் மக்களுடனும் பேரப்பிள்ளைகளுடனும் நினிவே நகரை விட்டுப் புறப்பட்டுத் தன் மாமன் மாமியிடம் திரும்பினான்.
15 அவர்கள் மிக முதிர்ந்த வயதிலும் நலமாய் இருக்கும் பொருட்டு தோபி அவர்களை நன்றாகக் கவனித்து வந்தான்@ அவர்கள் இறந்த வேளையில் அவர்கள் கண்களை மூடினான். அப்பொழுது இரகுவேலுடைய எல்லாச் சொத்துகளும் அவன் உடைமைகள் ஆயின. அவன் தன் மக்களின் மக்களை ஐந்தாம் தலைமுறை வரை கண்டு களித்தான்.
16 இவ்வாறு தெய்வ பயம் உள்ளவனாய் அவன் தொண்ணுற்றொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியுடன் அவனைப் புதைத்தனர்.
17 அவனுடைய உற்றார் உறவினரும் சந்திதியார் அனைவரும் நன்னடத்தையிலும் புனித வாழ்க்கையிலும் நிலைத்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் அந்நாட்டுக் குடிகள் அனைவருக்குமே உகந்தவர்களாய்த் திகழ்ந்து வந்தனர்.