அதிகாரம் 12
2 அதற்குத் தோபி மறுமொழியாக, "தந்தாய், நாம் அவருக்கு என்ன வெகுமதி கொடுக்கப் போகிறோம்? அவர் செய்த உதவிகளுக்குத் தகுதியான கைம்மாறும் உண்டோ?
3 அவர் என்னை நலமே அழைத்துக்கொண்டு போனார்@ திரும்பவும் என்னை நலமே கூட்டிக் கொண்டு வந்தார். அவரே கபேலுசிடமிருந்து பணத்தை வாங்கி வந்தவர். எனக்கு ஒரு மனைவியைத் தேடிக்கொள்ளச் செய்ததுமன்றி, அவளிடமிருந்த பேயை ஓட்டினதால் அவளுடைய பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். உம்மையும் விண்ணக ஒளியைக் காணும்படி செய்திருக்கிறார். அவராலே நாம் எல்லா நன்மைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறோம். இவற்றிற்குத் தகுந்த கைம்மாறு செய்ய நம்மால் முடியாது.
4 ஆயினும் தந்தையே, நீர் அவரைப் பார்த்து, நான் கொணர்ந்த எல்லாச் சொத்துகளிலும் சரி பாதியையாவது அவர் பெற்றுக்கொள்ளும் படி அவரைத் தாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன்" என்றான்.
5 அதன் பின் தந்தையும் மகனும் அவரைத் தனியே அழைத்து, மேற்சொன்ன சொத்தில் பாதியை ஏற்றுக் கொள்ளும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.
6 அப்போது அசாரியாசு அவர்களை நோக்கி, "விண்ணக இறைவன் உங்கள் மேல் இரக்கம் காட்டியுள்ளபடியால், அவரை வாழ்த்திப் போற்றி, உயிர்வாழ் மாந்தர் அனைவர் முன்னிலையிலும் அவரது மகிமையை அறிக்கையிடுங்கள்.
7 ஏனெனில் அரசனின் இரகசியத்தை மறைத்துக் காப்பாற்ற வேண்டியது உண்மையே. இருந்த போதிலும் கடவுளின் செயல்களை வெளிப்படுத்திக் கொண்டாடுவது மதிப்பிற்குரிய செயலாகும்.
8 நோன்போடு கூடிய செபமே நன்று. பொற் குவியல்களைக் குவிப்பதை விடத் தான தருமம் செய்வதே மேல்.
9 ஏனெனில், தானம் ஆன்மாவைச் சாவினின்று மீட்கும்@ பாவங்களைப் போக்கும்@ கடவுளின் இரக்கத்தையும் நித்திய வாழ்வையும் அளிக்கும்.
10 பாவமும் தீச்செயல்களும் புரிபவர்கள் தங்கள் ஆன்மாவுக்கு எதிரிகளாய் இருக்கிறார்கள்.
11 நானே உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன். இரகசியமாயிருந்தாலும் ஒரு வார்த்தை கூட உங்களுக்குச் சொல்லாமல் விட மாட்டேன்.
12 நீர் கண்ணீரோடு மன்றாடி இறந்தோரைப் புதைத்து, உம் உணவை மறந்து, செத்தவர்களைப் பகலில் உம் வீட்டில் ஒளித்து வைத்திருந்து இரவில் புதைத்து வந்தீர் அல்லவா? அப்பொழுது நான் உம் மன்றாட்டை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்.
13 நீர் அவருக்குப் பிரியமானவராய் இருந்ததனால் உம்மைப் பரிசோதிக்கச் சோதனைகள் வர வேண்டியிருந்தன.
14 இப்போதோ உமக்கு நலம் அளிக்கவும் உம் மகனின் மனைவி சாராளைப் பேயினின்று விடுதலையாக்கவும் நான் கடவுளால் அனுப்பப்பட்டுள்ளேன்.
15 ஏனெனில் நான் ஆண்டவரின் திருமுன் நிற்கும் ஏழு வானவர்களுள் ஒருவன்@ என் பெயர் இரபாயேல்" என்றார்.
16 இவற்றைக் கேட்டதும் அவர்கள் திகைத்து நடுங்கித் தரையில் முகம் குப்புற விழுந்தனர்.
17 மறுபடியும் கடவுளின் தூதர் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக! அஞ்சாதீர்கள்.
18 ஏனெனில் நான் உங்களோடு இருந்த போது இறைவனின் திருவுளப்படிதான் இருந்தேன். நீங்கள் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.
19 உங்களுடன் நான் உண்ணுவதாயும் குடிப்பதாயும் தோன்றினேன். ஆயினும் நான் மனிதருக்குப் புலப்படாத உணவையும் பானத்தையுமன்றோ பயன்படுத்திக் கொள்ளுகிறேன்?
20 இப்பொழுது என்னை அனுப்பினவரிடம் திரும்பிப் போகும் காலம் வந்துள்ளது. நீங்களோ கடவுளைப் போற்றி அவர்தம் வியப்புக்குரிய செயல்களை வெளிப்படுத்தக் கடவீர்கள்" என்றார்.
21 இவற்றைச் சொன்னபின் அவர் மறைந்து போய்விட்டார். பிறகு அவர்கள் அவரை ஒருபோதும் காணவேயில்லை.
22 அப்பொழுது அவர்கள் முகம் குப்புற விழுந்து மூன்று மணி நேரம் நெடுந்தெண்டனாய்க் கிடந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். பின்பு எழுந்திருந்து அவர் புரிந்திருந்த வியப்புக்குரிய செயல்கள் எல்லாவற்றையும் அறிவிக்கத் தொடங்கினர்.