அதிகாரம் 11
2 கடவுளின் தூதர் தோபியை நோக்கி, "சகோதரன் தோபி, நீ உன் தந்தையை விட்டு வந்த போது அவர் இருந்த நிலையை அறிவாயன்றோ?
3 உனக்கு விருப்பமானால் நாம் முன்னே நடந்து செல்வோம். உன் மனைவியும் ஊழியர்களும் விலங்குகளுமோ நமக்குப் பின்னால் மெதுவாக வரட்டும்" என்றார்.
4 இதற்கு எல்லாரும் ஒத்துக் கொள்ளவே இரபாயேல் தோபியை நோக்கி, "மீனின் பித்தப் பையை உன்னோடு எடுத்துக்கொள்@ அது தேவைப்படும்" என, தோபி பித்தப் பையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
5 பாதை அருகே ஒரு மேடு இருந்தது. அன்னாள் நாளும் அங்குச் சென்று அதன் மேல் உட்கார்ந்து கொள்வாள். ஏனெனில், அங்கிருந்து நாடு வெகுதூரம் தெரியும்.
6 ஒருநாள் அவள் அவ்வாறு மகனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அதோ, தொலைவில் தன் மகனே வருகிறான் என்று கண்டதும் துரிதமாய்ப் போய்த் தொபியாசுக்குச் செய்தி சொல்லி, "உம் மகன் அதோ வருகிறான்" என்றாள்.
7 அப்போது இரபாயேல் தோபியை நோக்கி, "நீ உன் வீட்டில் நுழைந்தவுடன் உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவருக்கு நன்றி கூறி உன் தந்தையிடம் போய், அவரை முத்தமிட்ட பின்பு, தாமதியாது,
8 நீ கொண்டு வரும் மீன் பித்தத்தை எடுத்து அவரது கண்களில் பூசு. உடனே உன் தந்தையின் கண்கள் திறக்கப்பட்டு அவர் விண்ணக ஒளியைக் கண்டு உன்னைப் பார்த்து அகமகிழ்வார். இது உறுதி" என்றார்.
9 அந்நேரத்தில் அவர்களோடு போயிருந்த நாய், முன்னறிவிக்கும் தூதனைப் போல் வந்து வாலையாட்டித் தன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கிற்று.
10 அப்போது கண்பார்வை அற்றிருந்த தந்தை எழுந்து கால் தட்டுத் தடுமாறி ஒரு வேலைக்காரனின் துணையோடு துரிதமாய் நடந்து மகனை எதிர் கொண்டு போனார்.
11 அவரும் அவர் மனைவியும் அவனை வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சி மிகுதியால் இருவரும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.
12 பின்னர் கடவுளைத் தொழுது அவருக்கு நன்றி நவின்றபின் அவர்கள் உட்கார்ந்தனர்.
13 அப்போது தோபி மீன் பித்தத்தில் கொஞ்சம் எடுத்துத் தன் தந்தையின் கண்களில் பூசினான்.
14 அரை மணி நேரம் சென்ற பின் அவர் கண்களிலிருந்து முட்டைத் தோல் போன்ற ஒரு படலம் வெளி வரத் தொடங்கிற்று.
15 தோபி அதைப் பிடித்து அவர் கண்களிலிருந்து இழுக்க, தந்தை உடனே பார்வை அடைந்தார்.
16 அதனால் அவரும் அவர் மனைவியும் அவருக்கு அறிமுகமானார் அனைவருமே கடவுளைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
17 இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுளே, நான் உம்மைத் துதிக்கிறேன். ஏனெனில் நீரே என்னைத் தண்டித்தீர்@ நீரே என்னை மீட்டீர். இதோ, நான் என் மகனைக் காணப்பெற்றேன்" என்று தொபியாசு கடவுளைப் புகழ்ந்தார்.
18 ஏழு நாளுக்குப் பிறகு அவருடைய மகனின் மனைவி சாராள் ஊழியக்காரர்களோடும், ஆடுமாடு ஒட்டகங்களோடும் நலமே வந்து சேர்ந்தாள். அவள் தன் திரண்ட சீதனப் பணத்தையும், கபேலுசுவிடமிருந்து பெற்ற பணத்தையும் கொணர்ந்தாள்.
19 பின்பு தோபி தன் தாய் தந்தையரைப் பார்த்து வழித்துணையாகத் தனக்குக் கிடைத்த மனிதன் மூலம் கடவுள் தனக்குச் செய்திருந்த நன்மைகள் எல்லாவற்றையும் விரிவாய் எடுத்துக் கூறினான்.
20 அப்பொழுது தொபியாசின் உறவினரான ஆக்கியோரும் நாபாத்தும் அவர் பொருட்டு மகிழ்வுற்று, கடவுள் அவருக்குச் செய்திருந்த எல்லா நன்மைகளுக்காகவும் அவரை வாழ்த்தினர்.
21 அவர்கள் அனைவரும் ஏழு நாள் வரை விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடினர்.