அதிகாரம் 13
2 ஏனெனில், தண்டிப்பவரும் மீட்பவரும் நீரே. பாதாளத்தில் அமிழ்த்துகிறவரும் அதினின்று எழுப்புகிறவரும் நீரே. ஒருவனும் உமது கைக்குத் தப்பமுடியாது.
3 இஸ்ராயேல் மக்களே, ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். புறவினத்தார் முன்னிலையில் அவருக்குப் புகழ் பாடுங்கள்.
4 ஏனெனில் அவர்தம் வியப்புக்குரிய செயல்களை நீங்கள் வெளிப்படுத்தி, அவரை அன்றி எல்லாம் வல்ல கடவுள் வேறுயாரும் இல்லை என்று, அவரை இன்னும் அறியாத புறவினத்தார்க்கு நீங்கள் அறிவிக்கும் பொருட்டே அவர் அவர்கள் மத்தியில் உங்களைச் சிதறடித்தார்.
5 நம் தீச்செயல்களின் காரணமாக அவர் நம்மைத் தண்டித்தார். தமது இரக்கத்தின் பொருட்டு நம்மை மீட்பார்.
6 நம் நடுவில் அவர் செய்தவற்றைப் பாருங்கள். அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அவரை மகிமைப் படுத்துங்கள். என்றும் ஆளும் அரசரை உங்கள் செயல்களால் ஏத்திப் போற்றுங்கள்.
7 நானோ அடிமை நாட்டில் இருந்து கொண்டே அவரைப் புகழ்ந்து பாடுவேன். ஏனெனில் அவர் பாவியான மக்கள் மீது தமது மகிமையை வெளிப்படுத்தினார்.
8 ஆகையால், ஓ பாவிகளே, மனம் திரும்புங்கள். கடவுள் உங்களுக்கு இரக்கம் காட்டுவார் என்று நம்பி அவரது திருமுன் நேர்மையோடு நடங்கள்.
9 நான் அவரில் மகிழ்ச்சி கொள்வேன். என் ஆன்மாவும் அவரிடத்திலேயே அக்களிப்புக் கொள்ளும்.
10 ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே, அவரைத் துதியுங்கள். இன்ப நாட்களை எண்ணி அவரை மகிமைப்படுத்துங்கள்.
11 கடவுளின் நகரான யெருசலமே, உன் செயல்களை முன்னிட்டே ஆண்டவர் உன்னைத் தண்டித்தார்.
12 ஆண்டவராகிய கடவுள் உனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தருளினர். அவர் எக்காலமும் அரசாண்டு வருகின்றார். அவர் உன் நடுவே தமது கூடாரத்தைப் புதிதாய்க் கட்டவும், சிறைப்பட்டவர்கள் அனைவரையும் திரும்பவும் உன்னிடம் அழைத்துக் கொண்டு வரவும், ஊழியுள்ள காலம் வரை நீ களித்து மனமகிழும் பொருட்டு அவரை வாழ்த்துவாயாக.
13 நீ ஒளிவிட்டு மிளிர்வாய். மண்ணுலக மாந்தர் அனைவரும் உன்னை வணங்குவர்.
14 தொலைவினின்று அவர்கள் உன்னிடம் வருவார்கள். காணிக்கை கொண்டுவந்து உன் அகத்தில் கடவுளைத் தொழுவார்கள். உனது நாட்டைப் புனித நாடு என்று போற்றுவார்கள்.
15 ஏனெனில் உன் நடுவிலிருந்து கொண்டு உன் மாபெரும் பெயரைக் கூவி அழைப்பார்கள்.
16 உன்னைப் பழித்தவர்கள் சபிக்கப்படுவார்கள்@ உன்னை இகழ்ந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் படுவார்கள். உன்னைக் கட்டி எழுப்பினவர்களோ ஆசீர் பெறுவார்கள்.
17 உன் மக்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டுக் கடவுளில் ஒன்றுபடுவார்கள். ஆதலால் நீ அவர்களில் மகிழ்ச்சி அடைவாய்.
18 உன்பால் அன்பு கொண்டு உன் சமாதானத்தில் மகிழ்வுறும் யாவரும் பேறு பெற்றோர்.
19 என் ஆன்மாவே, ஆண்டவரை வாழ்த்துவாயாக@ ஏனெனில் நம் ஆண்டவரான கடவுள் தமது நகரான யெருசலேமை எல்லா இடுக்கண்களினின்றும் மீட்டுள்ளார்.
20 என் சந்ததியில் சிலராவது யெருசலேமின் சிறப்பைக் காணும் பேறுபெற்றால் நான் மகிழ்வுறுவேன்.
21 யெருசலேமின் கதவுகள் நீலமணிகளாலும் மரகதக் கல்லாலும் செய்யப்படும். அதைச் சுற்றிலுமுள்ள சுவர் முழுவதும் விலையேறப் பெற்ற கற்களால் கட்டப்படும்.
22 அதன் தெருக்கள் எல்லாம் தூய வெண் கற்களால் பாவப்படும். அதன் தெருக்களில் ~அல்லேலூயா~ என்று பண் இசைப்பர்.
23 அதை மேன்மைப் படுத்திய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவர் அதனை என்றென்றும் ஆண்டு நடத்துவாராக! ஆமென்."