பெரியார் ஈ.வெ. ராமசாமி ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார், 1921 கள்ளுக்கடை மறியலின்போது, தன் சொந்தத் தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 1924ல் அவர் வைக்கம் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் ஆலயத்துக்கு அருகில் இருந்த சாலையில் தீண்டத்தகாதவர்கள் நடந்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வ.வே.சு ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை அவர் எதிர்த்தார். 1920 முதல் 1925 வரை பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெரியார் ஈ.வெ. ராமசாமி
பின்னர் 1925ல் அவர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். திராவிடர்களின் முன்னேற்றம், பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, இந்து சமய மக்களின் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிதல் போன்றவையே சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். ஜாதிமுறை, குழந்தைகள் திருமணம், கட்டாயப்படுத்தப்பட்ட விதவை முறை போன்றவற்றை அவர் கடுமையாக சாடினார். கலப்புத் திருமணங்களை அவர் ஆதரித்தார். சடங்குகள் இல்லாத பல திருமணங்களை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். அத்தகைய திருமணம் சுயமரியாதை திருமணம் என்று அழைக்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு சமய சார்பற்ற பெயர்களையும் அவர் சூட்டினார். இந்து சமுதாயத்தின் சமூக அடிப்படையான ஜாதிமுறையைப் பற்றிய விளக்க ஏடான மனுதர்ம சட்டங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற தமிழ் ஏடுகளைத் தொடங்கி அவற்றின் மூலம் தனது கருத்துக்களை பெரியார் பரப்பி வந்தார்.
பெரியாரின் அரும்பணியைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு ஈ.வே.ராவுக்கு "பெரியார்". பட்டம் வழங்கப்பட்டது. 27-06௧970 ஆம் ஆண்டு ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் - தந்தை பெரியாரை 'தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ்' என பாராட்டி போற்றியது.