மீனாந்தர், மிலிந்தா என்றும் அழைக்கப்படுகிறார். அவரது தலைநகரம் சாகாலா (சியால்கோட்). அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டார். புத்த சமயத் துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது "மிளிந்தபான்ஹோ" (மிலிந்தரின் வினாக்கள்) என்ற பாலிமொழி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார். கிரேக்கத் தூதரான ஹெளியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார். மீனாந்தரின் மறைவுக்குப் பின்னரும் நூறாண்டுகளுக்கும் மேலாக கிரேக்கத்தின் தாக்கம் இந்தியாவில் நீடித்தது.
சாகர்கள்
சாகர்கள் அல்லது சைத்தியர்கள் பாக்டிரியா பார்த்தியா பகுதிகளைத் தாக்கி கிரேக்க ஆட்சியாளர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றினர். கிரேக்கர்களின் வழிமுறையைப் பின்பற்றி சாகர்களும் தங்களது ஆட்சியை வடமேற்கு இந்தியாவில் மெல்ல விரிவுபடுத்தினர். சாகர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். தட்சசீலத்திலிருந்து ஆட்சி செய்த வடக்கு சத்திரப்புக்கள். மற்றொரு பிரிவினர் மகாராஷ்டிரப் பகுதியில் ஆட்சிபுரிந்த மேலைச் சத்திரப்புக்கள்.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் சாகர்களின் ஆட்சியை நிறுவியவர் மாவஸ். அவருக்குப்பின் அவரது மகன் முதலாம் ஏசஸ் ஆட்சிக்கு வந்தார். அவர் விக்ரம சகாப்தத்தை நிறுவினார் என்ற கருத்தும் உண்டு. தட்சசீலத்து சத்திரப்புக்களை பார்த்தியர்கள் முறியடித்தனர்.
குஷானர்கள்
குஷானர் நாணயங்கள்
மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட யுச்சி பழங்குடியின் ஒரு பிரிவினரே குஷானர்கள். அவர்கள் முதலில் சாகர்களை விரட்டிவிட்டு பாக்டிரியாவைக் கைப்பற்றினர். பின்னர், படிப்படியாக காபூல் பள்ளத்தாக்கு வழியாக முன்னேறி காந்தாரப் பகுதியைக் கைப்பற்றினர். குஷாண மரபைத் தோற்றுவித்தவர் குஜூலா காட்பிசஸ் அல்லது முதலாம் காட்பிசஸ். காபூல் பள்ளத்தாக்கை கைப்பற்றிய அவர் தமது பெயர் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். அவரது புதல்வர் வீமா காட்பிசஸ் அல்லது இரண்டாம் காட்மிசஸ் வடமேற்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றி மதுரா வரை முன்னேறினார். 'முழு உலகையும் வென்ற தவைவன்' என்ற விருதுகள் பொறித்த தங்க நாணயங்களையும் அவர் வெளியிட்டார். அவர் சிறந்த சிவபக்தனாகவும் திகழ்ந்தார்.