1. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவில் தனது வாணிகத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. இனி, அது பிரிட்டிஷ் அரசரின் அரசியல் முகவராக மட்டும் செயல்படும் என்று தெளிவாக்கப்பட்டது.
2. வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் இனிமேல் இந்தியாவின் தலைமை ஆளுநர் என்று அழைக்கப்படுவார். இதனால் இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் என்று கூட கூறலாம்.
3. தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் டி.பி. மெக்காலே என்பவராவார்.
4. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேதகு மன்னரின் குடிமக்களாக எவரும், தங்களது சமயம், பிறப்பிடம், குடிவகை அல்லது நிறம் காரணமாக எவ்வித பதவி அல்லது பணியில் இருப்பதை தடை செயயக்கூடாது என இச்சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறியது. பொது ஆட்சிப் பணிகள் இந்திய மயமாக்கப்படுவதற்கு இச்சட்டம்தான் அடிகோலியது எனலாம்.
இருபது ஆண்டுகளுக்குப்பிறகு 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுவே பட்டயச் சட்டங்கள் வரிசையில் இறுதியானதாகும்.
வில்லியம் பெண்டிங் பிரபுவின் சீர்திருத்தங்கள்
இந்திய வரலாற்றில் வில்லியம் பெண்டிங் பிரபுவின் வருகை பலவிதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது எனலாம். அவரது ஆட்சி ஏழு ஆண்டுகளே நீடித்தது என்ற போதிலும் பல்வேறு நிலையான சீர்திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. இவற்றை நிதித்துறை, ஆட்சித்துறை, சமூகம் மற்றும் கல்வி என்ற தலைப்புக்களாக வரையறுக்கலாம்.