1812 ல் பிண்டாரிகள் மீர்சாபூர், ஷாஹாபாத் மாவட்டங்களைத் தாக்கி கொள்ளையடித்தனர். 1815ல் நிசாமின் ஆட்சிப் பகுதிகளை சூரையாடினர். 1816ல் வடசர்க்கார் மாவட்டங்களில் புகுந்து கொள்ளையடித்தனர். எனவே, ஹேஸ்டிங்ஸ் பிரபு பிண்டாரிகளை ஒடுக்குவது என உறுதிபூண்டார். இதற்கென, 1,13,000 வீரர்கள், 300 துப்பாக்கிகள் கொண்ட ஒரு பெரும்படையைத் திரட்டினார். நாற்புறமிருந்தும் இப்படை பிண்டாரிகளைத் தாக்கியது. வடக்கில் இப்படைக்கு ஹேஸ்டிங்சே தலைமை வகித்தார். தெற்கில் சர் தாமஸ் வாஸ்லாப் படை நடத்தினார். 1818 ஆம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்டனர். அவர்களது கூட்டங்கள் கலைக்கப்பட்டன. உத்திரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தில் கரிம்கானுக்கு ஒரு சிறிய பண்ணை கொடுக்கப்பட்டது. வாசில் முகமது சிந்தியாவிடம் தஞ்சமடைந்தார். ஆனால். சிந்தியா அவரை பின்னர் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். வாசில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சித்து பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து காடுகளுக்கு தப்பியோடினார். அங்கு புலிக்கு இரையானார். 1824ம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்தது.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
மராட்டியக் கூட்டிணைவின் வீழ்ச்சி
மராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கிய சாதனையாகும். மூன்றாம் பானிப்பட்டுப் போர் (1761) அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆங்கிலேய மராட்டியப் போர்களினால் மராட்டியர்கள் வலிமை குன்றியிருந்தனர். ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை. தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள், வலிமையும் திறமையும் குன்றிய வாரிசுகளால் மேலும் பலம் இழந்தனர். மராட்டியத் தலைவர்களிலேயே சக்திமிக்கவர்களான போன்ஸ்லே, கெயிக்வார், சிந்தியா, ஹோல்கர் மற்றும் பேஷ்வா ஆகியோருக்கிடையே ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் பூசல்கள் நிறைந்து காணப்பட்டனர்.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மராட்டியக் கூட்டிணைவின் தலைவராக விரும்பினார். அதே சமயம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை பெற முயற்சித்தார். அவரது முதலமைச்சரான திரிம்பக்ஜியும் இதனை ஊக்குவித்தார்.