பூனா ஒப்பந்தம்
1938 ஆம் ஆண்டு வாக்கில், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக போராடும் தேசிய அளவிலான தலைவராக உருவெடுத்தார். முதல் வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த அம்பேத்கர், அவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கப்படவேண்டும் என்று கோரினார். 1932 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் தனது "வகுப்புக் கொடை"யை அறிவித்தார். இதன்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் தனி வகுப்பினராகக் கருதப்பட்டு அவர்களுக்கு தனித்தொகுதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. 'வகுப்புக் கொடை'டையை எதிர்த்து மகாத்மா காந்தி 1932 செப்டம்பர் 20 ஆம் நாள் எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இறுதியில் டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுலே 'பூனா ஒப்பந்தம்' எனப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி, பல்வேறு மாகாண சட்டமன்றங்களில் 148 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஒதுக்கீடு செய்தது. வகுப்புக் கொடையின்படி 71 இடங்களே இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
1932ல் மூன்றாவது வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. மறுபடியும் காங்கிரஸ் இதனை புறக்கணித்தது. இருப்பினும், 1933 மார்ச்சில் பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வெள்ளை அறிக்கையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரும் தேசிய இயக்கமும்
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்ட விதிகளின்படி 1937ல் தேர்தல்கள் நடந்தன. இந்தியாவின் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சரவைகள் அமைக்கப்பட்டன. 1939 செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. மக்களை கலந்து ஆலோசிக்காமலேயே பிரிட்டிஷ் அரசு இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது. காங்கிரஸ் இச்செயலை கடுமையாக எதிர்த்தது. தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் 1939 டிசம்பர் 12 ஆம் நாள் மாகாணங்களில் பதவியிலிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. இதனை முஸ்லீம் லீக் "விடுதலை நாளாகக்" கொண்டாடியது. 1940 மார்ச்சில் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தது.