இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. அத்தகைய நடவடிக்கைகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். 1943 ஜூலை 2 ஆம் நாள் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரை சென்றடைந்தார். இந்திய தேசிய ராணுவத்தை 'டெல்லி சலோ' என்று முழக்கமிட்டு உற்சாகப் படுத்தினார். இந்திய சுதந்திரக் கழகத்தின் தலைவரான அவர் இந்திய தேசிய ராணுவத்தின் தளபதியாகவும் பொறுப்பேற்றார். நாட்டிற்கு 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை வழங்கியவர் அவரே. இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் சுபாஷ் பிரிவு, காந்தி பிரிவு, நேரு பிரிவு என்று பெயரிடப்பட்டன. ராணி லட்கமி பாய் பெயரைக் கொண்ட பெண்கள் பிரிவையும் அவர் தொடங்கினார்.
சுபாஷ் சந்திரபோஸ் |
கோஹிமாவில் வெற்றியைப் பெற்ற இந்திய தேசிய ராணுவம் இம்பாலை நோக்கி முன்னேறியது. 1945ல் ஜப்பான் சரணடைந்த பிறகு அது தன் முயற்சிகளைக் கைவிட்டது. சுபாஷ் போஸ் தைவானுக்கு சென்றார். அங்கிருந்து டோக்கியோ செல்லும் வழியில் 1945 ஆகஸ்டு 18 ஆம் நாள் விமான விபத்தில் அவர் உயிர் நீத்தார் என நம்பப்படுகிறது.
டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. பண்டித ஜவஹர்லால் நேரு, தேஜ் பகதூர் சாப்ரு வீரர்கள் அவர்கள் சார்பாக வாதிட்டனர்.
காபினட் தூதுக்குழு (1946)
இரண்டாம் உலகப் போருக்குப்பின், இங்கிலாந்து பிரதமராக அட்லி பிரபு பொறுப்பேற்றார். 1946 மார்ச் 15 ஆம் நாள் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் சுயநிர்ணய உரிமையை ஏற்றதுடன் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒப்புதலையும் வழங்கினார். பிரிட்டிஷ் அமைச்சரவையைச் சேர்ந்த மூன்று பேர் - பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி. அலெக்சாந்தர் - கொண்ட குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். இதுவே 'காபினட் தூதுக்குழு' என்ற பெயரைப் பெற்றது.
காபினட் தூதுக்குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது. இதன்படி மாகாணங்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி அரசியலமைப்புகளின் கீழ் இயங்கும். பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள், சுதேச அரசுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய ஒன்றியம் ஒன்றையும் அது முன்மொழிந்தது. இந்த ஒன்றியம் அயலுறவுக் கொள்கை, பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களை மாகாணங்களிடமே ஒப்படைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் யோசனை கூறப்பட்டது. முஸ்லிம் லீக், காங்கிரஸ் இரண்டுமே இத்திட்டத்தை ஒப்புக் கொண்டன.