கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி, இந்தியா மீது ஜப்பான் படையெடுக்கும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு வெளியேறச் செய்யும் இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் மட்டுமே ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும். இந்து முஸ்லீம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று காந்தி கருதினார்.
1942 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடி புகழ் வாய்ந்த "வெள்ளையனே வெளியேறு" தீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தி "செய் அல்லது செத்துமடி" என்று அறைகூவலை விடுத்தார்.
1942 ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் காங்கிரசின் முக்கிய தலைவர்களை அரசாங்கம் கைது செய்தது. அரசின் இந்த திட்டமிட்ட நடவடிக்கையால் இந்திய மக்கள் இயக்கத்தை வழி நடத்த தலைவர்களின்றி விடப்பட்டனர். மகாத்மா காந்தி பூனா சிறையில் அடைக்கப்பட்டார். பண்டித ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆஸாத் போன்ற தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் |
வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறையை ஏவியது. 538 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குறைந்தது 7000 பேர் கொல்லப்பட்டனர். 60,229 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். இந்த இயக்கம் இந்திய விடுதலைக்கு நேரடியாக இட்டுச் சென்றது. இந்தியர்களிடையே வீரத்தையும், உற்சாகத்தையும், ஒட்டுமொத்த தியாக மனப்பாங்கையும் இந்த இயக்கம் தோற்றுவித்தது.