அக்காலத்தில் பல வரலாற்றுப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. அய்னி அக்பரி, அக்பர் நாமா ஆகியவற்றை அபுல் பாசல் எழுதினார். அவரது சகோதரரான அபுல் பெய்சி அக்காலத்திய முன்னணி கவிஞர். அவரது மேற்பார்வையில்தான் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உத்பி, நாசிரி இருவரும் மற்ற பாரசீக மொழிக் கவிஞர்களாவர்.
ஜஹாங்கீரின் சுயசரிதமான துசுகி ஜஹாங்கீரி அதன் உன்னத நடைக்கு பெயர் பெற்றதாகும். கியாஸ் பெக், நாகிப்கான், நியமத்துல்லா போன்ற அறிஞர்களையும் ஜஹாங்கீர் ஆதரித்தார்.
துளசிதாசர்
பாதுஷா நாமா என்ற நூலை எழுதியவர் அப்துல் ஹமீது லாஹோரி. ஷாஜகான் நாமாவைப் படைத்தவர் இனாயத்கான். இந்த இருவர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், வரலாற்று அறிஞர்களையும் ஷாஜகான் போற்றி ஆதரித்தார். ஷாஜகானின் புதல்வர் தாராஷக்கோ பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை பாரசீக மொழியாக்கம் செய்தார். அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் பல வரலாற்றுப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. பாரசீக மொழியின் புகழ்வாய்ந்த அகராதிகள் முகலாயர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன.
வங்காளம், ஒரியா, ராஜஸ்தானி, குஜராத்தி போன்ற வட்டார மொழிகளும் முகலாயர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல பக்திப்படைப்புகளும் வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அக்பர் காலம் தொடங்கி இந்தி கவிஞர்களும் முகலாயர் அவையில் இடம்பெற்றனர். இராமாயணத்தின் இந்தி வடிவமான ராம் சரித்மனஸ் என்ற நூலைப் படைத்த துளசிதாசர் ஒரு புகழ்மிக்க இந்திக் கவிஞராவார்.