ஷாஜகான் காலத்தில் மசூதி கட்டப்படுவதும் அதிகரித்தன. ஆக்ராவில் கட்டப்பட்டுள்ள முத்து மசூதி முழுவதும் வெள்ளைநிறப் பளிங்குக் கற்களால் ஆனதாகும். டெல்லியிலுள்ள ஜம்மா மசூதி செந்நிறக் கற்களானவை.
முகலாயக் கட்டிடக்கலையின் தொடர்ச்சி பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் காணப்பட்டது. மாகாண அரசுகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. அம்ரிட்சரில் உள்ள பொற்கோயிலில் முகலாயக் கட்டிடக்கலையின் கூறுகளைக் காண முடிகிறது.
ஓவியங்களும், இசையும்
ஓவியக்கலை
ஓவியக்கலைக்கு முகலாயர்கள் ஆற்றியுள்ள தொண்டு மகத்தானதாகும். ஹூமாயூன் பாரசீகத்தில் தங்கியிருந்த போதுதான் முகலாயர்கால ஓவியக்கலைக்கு நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டது. அவர் இந்தியாவிற்கு திரும்பியபோது மீர் சையது அலி, அப்துல் சமது என்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தார். அக்பரது ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஓவியர்களும் புகழ்பெற்றுத் திகழ்ந்தனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கிவைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஓவியர்கள் அவரது அவைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்துக்களும், முஸ்லிம்களும் இப்பணியில் ஈடுபட்டனர். பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகியோர் அக்பரது அரசவைக்கலைஞர்களாகவும் ஏற்றம் பெற்றனர்.
பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்த மகாபாரதம், இராமாயணம் ஆகிய காவியங்களுக்கான விளக்கப்படங்கள் நுண் ஒவியங்களாகத் தீட்டப்பட்டன. அக்பர் நிறுவிய கலைக்கூடத்தில் பல்வேறு இந்தியக் கதைகளும் நுண் ஓவிய விளக்கப்படங்களாக வரையப்பட்டன.