இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு படைப்பாளி விசாகதத்தர். முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம் என்ற இரண்டு நாடகங்களை அவர் எழுதியுள்ளார். அக்காலத்தின் புகழ் வாய்ந்த கவிஞர் சூத்ரகர். அவர் எழுதிய மிருச்சகடிகம் நகைச்சுவைக்கும் சோகத்திற்கும் பெயர்பெற்றது. அர்ச்சுனனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடைபெற்ற மோதலைக் கூறும் கதையான கிருதார்ஜின்யம் என்ற நூலைப் படைத்தவர் பாரவி. காவியதரிசனம், தசகுமாரசரிதம் ஆகிய நூல்களை தண்டின் எழுதியுள்ளார். சுபந்து எழுதிய வாசவதத்தை மற்றொரு முக்கிய படைப்பாகும். குப்தர் காலத்தில்தான் பஞ்சதந்திரக் கதைகள், விஷ்ணு சர்மா என்பவரால் தொகுக்கப்பட்டன. அமரசிம்ஹர் என்ற புத்தசமய அறிஞர் அமரகோசம் என்ற அகராதியைப் படைத்தார். தற்போது காணப்படும் புராணங்கள் குப்தர்கள் காலத்தில் தொகுப்பட்டதாகும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை பாகவத புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், மத்சய புராணம் என்பவையாகும். தற்காலத்தில் அறியப்படும் இராமாயணம், மகாபாரத நூல்களுக்கு இறுதிவடிவம் குப்தர் காலத்திலேயே அளிக்கப்பட்டது.
அறிவியல்
ஆரியபட்டர்
கணிதம், வானஇயல், ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் குப்தர்காலத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. இக்காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர் சிறந்த கணிதமேதை மற்றும் வான இயல் அறிஞர். கி.பி. 499 ம் ஆண்டு அவர் ஆரியபைட்டியம் என்ற நூலை எழுதினார். அது கணிதம், வானநூல் தொடர்புடையது. சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுவதை அறிவியல் அடிப்படையில் இந்நூல் விளக்குகிறது. பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன்முதலில் அறிவித்தவர் ஆரியபட்டரேயாவார். ஆனால் இக்கருத்துக்களை அவருக்குப்பின் வந்த வராஹமிகிரரும், பிரம்மகுப்தரும் நிராகரித்தனர்.
வராஹமிகிரர் ஐந்து வானஇயல் அமைப்புகளைக் கூறும் பஞ்ச சித்தாந்திகா என்ற நூலைப் படைத்தார். ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் அவர் திகழ்ந்தார். அவரது படைப்பான பிருகத்சம்ஹிதை வடமொழி இலக்கியத்தில் சிறந்த நூலாகப் போற்றப்படுகிறது. வான இயல், ஜோதிடம், புவியியல், கட்டிடக் கலை, வானிலை, விலங்குகள், மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவர் எழுதிய பிருகத்ஜாதகம் என்ற நூல் ஜோதிடக் கலைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. மருத்துவத்துறையில் சிறந்த மேதையான வாக்பதர் குப்தர் காலத்தில் வாழ்ந்தவர். பண்டைய இந்தியாவின் மருத்துவ மும்மணிகளில் அவரும் ஒருவர். குப்தர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மற்ற இருவர் சரகரும் சூஸ்ருதரும். 'அஷ்டாங்க சம்கிரஹம்' அல்லது மருத்துவத்தின் எட்டு பிரிவுகள் என்ற நூலை வாக்பதர் எழுதியுள்ளார்.