மேலை நாடுகளுடனான அயல்நாட்டு வர்த்தகம் குப்தப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக வளர்ச்சி பெற்றது. விரைவில் அது குப்தர்களின் மாற்றுத் தலைநகராகவும் விளங்கியது. வங்காளத்தில் உற்பத்தியான அழகிய பருத்தி ஆடைகள், பீகாரின் அவுரிச் சாயம், பனாரஸ் பட்டு, இமாலய மலைகளின் நறுமணப் பொருட்கள், சந்தனம், தென்னிந்திய வாசனைத் திரவியங்கள் போன்றவை இந்த துறைமுகங்களுக்கு எவ்வித தடையுமின்றி கொண்டு வரப்பட்டன. இந்தியப் பொருட்களை வாங்குவதற்காக மேற்கத்திய வணிகர்கள் ரோமனிய தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து குவித்தனர். இரண்டாம் சந்திரகுப்தர் வெளியிட்ட பல்வகை தங்க நாணயங்கள் குப்தப் பேரரசின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாகும்.
பிற வெற்றிகள்
வங்கத்தில் தனது எதிரிகளின் கூட்டிணைவை இரண்டாம் சந்திரகுப்தர் முறியடித்தார். சிந்து நதியைக் கடந்து சென்ற அவர் பாக்டிரியாவைக் கைப்பற்றினார். அங்கு ஆட்சிபுரிந்த குஷானர்களை அடிபணியச் செய்தார். இத்தகைய வெற்றிகளினால், குப்தப் பேரரசு மேற்கு மாளவம், குஜராத் கத்தியவார் வரை மேற்கில் பரவியது. வடமேற்கில் பேரரசின் எல்லை இந்து குஷ் மலைக்கப்பால் பாக்டிரியா வரை பரவியிருந்தது. கிழக்கே வங்காளத்தின் கிழக்குப் பகுதிவரையும், தெற்கே நர்மதை நதியை எல்லையாகக் கொண்டும் குப்தப் பேரரசு விளங்கியது.
பாஹியானின் வருகை
பாஹியான்
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் புகழ்வாய்ந்த சீனப் பயணியான பாஹியான் இந்தியாவிற்கு வருகைபுரிந்தார். இந்தியாவில் அவர் தங்கியிருந்த ஒன்பது ஆண்டுகளில் குப்தப் பேரரசில் மட்டும் ஆறு ஆண்டுகளைக் கழித்தார். கோட்டான், காஷ்கர், காந்தாரம், பஞ்சாப் என்று அவர் நிலவழியாகவே இந்தியாவிற்கு வந்தார். பெஷாவர், காசி, புத்தகயா உள்ளிட்ட பல இடங்களுக்கும் அவர் சென்றார். இலங்கை, ஜாவா வழியாக கடற்பயணமாக அவர் சீனா திரும்பினார். புத்தர் பிறந்து வாழ்ந்த இடத்தை தரிசித்து புத்தசமய சுவடிகளை சேகரித்து எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே பாஹியான் இந்தியாவிற்கு வந்தார். பாடலிபுத்திரத்தில் மூன்றாண்டுகள் தங்கி, வடமொழியைக் கற்றதோடு, புத்த இலக்கியங்களையும் படியெடுத்தார். குப்தப் பேரரசில் நிலவிய சமய, சமூக, பொருளாதார நிலைமைகளைப் பற்றி அவர் பல அரிய தகவல்களை குறிப்பிட்டுள்ளார். வடமேற்கு இந்தியாவில் புத்தசமயம் நன்கு புகழ்பெற்று விளங்கியதாகவும், ஆனால் கங்கைச் சமவெளியில் அது புறக்கணிப் பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கங்கைச் சமவெளியை அவர் "பிராமணர்களின் பூமி" என்று குறிப்பிட்டுள்ளார். கபிலவஸ்து, குசிநகரம் போன்ற சில புத்தசமய புனித இடங்கள் அழிந்துகொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். பேரரசின் பொருளாதாரச் செழிப்பை அவர் நன்கு விவரித்துள்ளார்.
பல்வேறு கோணங்களில் பாஹியானது குறிப்புகள் பயனுடையவை என்றபோதிலும், இரண்டாம் சந்திரகுப்தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் விவகாரங்களில் அவர் அதிக அக்கறை காட்டவில்லை. அவரது முதன்மை நோக்கம் சமயத்தைப் பற்றியதேயாகும். அவர் எதனையும் புத்தசமய நோக்கிலேயே மதிப்பிட்டார். சமூக நிலைமை பற்றிய அவரது கூற்றுக்கள் மிகையானவை. இருப்பினும், நாட்டின் பொதுவான நிலைமைகளை அறிந்து கொள்ள அவரது குறிப்புகள் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன.