குப்தர் கால வரலாற்றை எழுதுவதற்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. இலக்கியம், பொறிப்புகள், நாணயங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. குப்த அரசர்களின் பரம்பரை குறித்து புராணங்கள் குறிப்பிடுகின்றன. குப்தர்களின் எழுச்சி பற்றி விசாகதத்தர் எழுதிய சமகால நூல்களான 'தேவிசந்திரகுப்தம்', 'முத்ராராட்சசம்' இரண்டும் கூறுகின்றன. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி பாஹியான் விட்டுச் சென்றுள்ள குறிப்புகள் குப்தப் பேரரசின் சமூக பொருளாதார, சமய நிலைமைகளை எடுத்துக் கூறுகிறது.
அலகாபாத் கற்தூண் கல்வெட்டு
இத்தகைய இலக்கிய சான்றுகள் தவிர- மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு, அலகாபாத் கற்தூண் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளும் குப்த வரலாற்றுக்கு சான்றுகளாக உள்ளன. மெஹ்ருளி கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தனின் சாதனைகளைக் குறிப்பிடுகிறது. சமுத்திர குப்தனின் ஆட்கியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கிய சான்றாக விளங்குவது அலகாபாத் கற்தூண் கல்வெட்டு. அவரது ஆளுமையும் சாதனைகளும் அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. அசோகர் நிறுவிய கல்தூணில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நாகரி வரிவடிவத்தில் வடமொழியில் இது எழுதப்பட்டுள்ளது. ஹரிசேனர் தொகுத்த இக்கல்வெட்டில் 33 வரிகள் காணப்படுகின்றன. சமுத்திரகுப்தன் அரியணையேறிய சூழ்நிலை, வட இந்தியா மற்றும் தக்காணத்தில் அவர் மேற்கொண்ட படையெடுப்புகள், சமகால ஆட்சியாளர்களுடன் அவர் கொண்டிருந்த உறவுகள், ஒரு கவிஞராகவும் அறிஞராகவும் அவரது சாதனைகள் போன்றவற்றை இக்கல்வெட்டு விவரிக்கிறது.
குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உள்ள உருவங்களும் சொற்றொடர்களும் குப்த மன்னர்களின் பட்டங்கள், அவர்கள் செய்த வேள்விகள் போன்ற விவரங்களைத் தருகின்றன.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 320 - 330)
குப்த மரபை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர். அடுத்து பதவிக்கு வந்தவர் கடோத்கஜர். இவர்கள் இருவரும் 'மகாராஜா' என்று அழைக்கப்பட்டனர். இவர்களது ஆட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. அடுத்த ஆட்சியாளர் முதலாம் சந்திரகுப்தர். மகாராஜாதிராஜா அல்லது அரசர்களுக்கு அரசன் என்று முதலில் அழைக்கப்பட்டவர். அவரது பரந்த போர்வெற்றிகளை இந்த விருது வெளிப்படுத்துவதாக உள்ளது. லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் அவர் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவி என்ற இளவரசியை அவர் மணந்துகொண்டார். இதனால் குப்தர்களின் வலிமையும் புகழும் அதிகரித்தன. மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு அவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி குறிப்பிடுகிறது. கி.பி. 320 ஆம் ஆண்டு தொடங்கும் குப்த சகாப்தத்தை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர் என்ற கருத்தும் நிலவுகிறது.