சமயத்தைப் பொறுத்தவரை, குப்தர் காலத்தில் பிராமண சமயமே செல்வாக்கு பெற்று விளங்கியது. அதில் வைணவம், சைவம் என இரண்டு பிரிவுகள் இருந்தன. பெரும்பாலான குப்த அரசர்கள் வைணவர்களாக இருந்தனர். அவர்கள் அசுவமேத யாகங்களை செய்தனர். உருவ வழிபாடும், விரிவான சடங்குகளுடன் கூடிய சமய திருவிழாக்கள் போன்றவற்றால் இவ்விரு சமயப் பிரிவுகளும் விரைவாக வளர்ச்சி பெற்றன. புராணங்கள் போன்ற சமய இலக்கியங்கள் குப்தர் காலத்தில்தான் முழு வடிவம் பெற்றன. பிராமண சமயத்தின் எழுச்சியால், புத்த சமயமும், சமண சமயமும் புறக்கணிக்கப்பட்டன. கங்கைச் சமவெளியில் புத்தசமயம் வீழ்ச்சியடைந்ததாக பாஹியான் கூறியுள்ளார். ஆனால் வசுபந்து போன்ற புத்தசமய அறிஞர்கள் குப்தப் பேரரசர்களால் ஆதரிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் சமண சமயம் செழித்து வளர்ந்தது. இக்காலத்தில்தான் வாலாபியில் சமண சமய மாநாடு கூட்டப்பட்டது. சுவேதாம்பரர்களின் சமண விதிகள் எழுதப்பட்டன.
கலையும் பண்பாடும்
கலை, அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் குப்தர் காலத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. இதனாலேயே இது ஒரு பொற்காலம் என அழைக்கப்படுகிறது. சில அறிஞர்கள் இக்காலத்தை மறுமலர்ச்சிக் காலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால், குப்தர் காலத்திற்கு முன்பு எந்தவொரு இருண்டகாலமும் இல்லை என்பதையும் நாம் உணரவேண்டும். எனவே, குப்தர் காலத்தில் ஏற்பட்ட இந்த பண்பாட்டு வளர்ச்சியை இந்திய அறிவுசார் நடவடிக்கைகளின் உச்சகட்டம் என்று அழைக்கலாம்.
கலை, கட்டிடக் கலை
தியோகார் கோயில்
இந்தியக் கலை, கட்டிடக் கலை வரலாற்றில் குப்தர் காலம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. நாகரி, திராவிடக் கலைப்பாணிகள் இரண்டும் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றன. ஆனால், இக்காலத்திய கலைச் சின்னங்களின் பெரும்பகுதி ஹூணர்கள் போன்ற அந்நியப் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. எனினும் எஞ்சியுள்ள கோயில்கள், சிற்பங்கள், குகை ஒவியங்கள் குப்தர் காலக் கலையின் பொலிவுக்கு சான்றுகளாக விளங்குகின்றன.
ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். காந்தாரக் கலையின் தாக்கத்தை இவற்றில் காணமுடிய வில்லை. ஆனால், மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாயலைக் காணலாம். சாரநாத் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது.