“இல்லை நண்ப! இது ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்டதல்ல.”
“அப்படியானால்?”
“இது ஒரு விநோதமான ரோமம். மரத்தில் விளைகிறது.”
“நம்முடைய பிரதேசத்தில் எப்படி ஆட்டின் உடம்பிலிருந்து ரோமம் கிடைக்கிறதோ, அதே மாதிரி இவை காட்டு மரங்களிலிருந்து கிடைக்கிறதா?”
“அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நான் நேரில் பார்த்ததில்லை.”
சுமேதன் தன் கையில் பிடித்திருந்த தக்களியைத் தொடையில் வைத்து அழுத்திச் சுற்றிவிட்டு விட்டு, இடது கையிலிருக்கும் ரோமத்தை வலது கை விரல்களால் நிரடி விட்டுக்கொண்டே,
“காடுகளிலுள்ள மரங்களில் ரோமம் முளைப்பதாயிருந்தால், அந்தப்
பிரதேசத்தில் வசிப்பவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஏன் நம்முடைய பிரதேசத்தில் அந்த மரங்களை உண்டாக்க முடியாதா?” என்று கேட்டான்.
“இந்தப் பக்கத்துப் பனி, வெயில் இவைகளை அது தாங்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நண்ப! மாமிசத்தை மரத்திலிருந்து உண்டாக்க முடியாதே.”
“யார் கண்டார்கள்! மரத்திலிருந்து ரோமம் உண்டாகும் தேசத்தில், மாமிசமும் வேறெதிலிருந்தாவது உண்டாகக் கூடும். இதன் விலை என்ன?”
“கம்பளத்தைப் பார்க்கிலும் ரொம்பக் குறைவுதான். ஆனால், அதைப் போல இது உறுதியாயில்லை.”
“எங்கிருந்து வாங்கினாய்?”
“அசுரர்களிடமிருந்து இங்கிருந்து ஐம்பது கோச* தூரத்தில் அவர்களுடைய தேசமிருக்கிறது. அவர்கள் இந்த ஆடையை அணிகிறார்கள்.”
“இவ்வளவு மலிவாயிருக்கும் போது நாமும் இந்த ஆடையையே ஏன் அணியக் கூடாது?”
“இந்த ஆடை நம்முடைய பிரதேசத்துக் குளிரைத் தாங்காது.”
“அப்படியானால், அவர்கள் எப்படி உடுத்துகிறார்கள்?”
“அவர்களுடைய தேசத்தில் பனி ரொம்பக் குறைவு. பனிக்கட்டியைப் பார்க்கவே முடியாது.”
“நீ வியாபாரத்திற்காகக் கிழக்கு, மேற்கு, வடக்கு இந்த மூன்று திசைகளையும் விட்டு விட்டுத் தெற்கு திசையையே நோக்கிச் செல்கிறாயே, ஏன்?”
“அங்கு லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. பொருள்களும் விதம் விதமாகக் கிடைக்கின்றன. ஆனால், ஒரு பெரிய கஷ்டம். அந்த நாட்டு
____________________________________________________
*ஒரு கோசம் என்பது சற்றேறக் குறைய இரண்டு மைல் தூரம்.