பல தலைமுறைகள் கடந்துவிட்டன. தங்களுடைய முதல் இந்திரனான
புருகூதன் தங்கள் தலைவன் என்பதையே ஜனங்கள் மறந்து, அவனைக் கடவுளாக ஆக்கி விட்டனர். ஜனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவ்வளவு ஜனங்களையும் போஷிப்பதற்கு வட்சுநதிப் பிரதேசம் போதுமானதாயில்லை. ஆகையால் அவர்களில் எத்தனையோ பேர் தெற்கு நோக்கி முன்னேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு முன்னே ஒவ்வொரு சமூகமும் சுதந்திரமாயிருந்தது. சமூகத் தலைவனுக்கு, அந்தச் சமூகத்தில் முக்கியத்துவம் இருந்தாலும், அவனுடைய தலைமை சமூகத்தின் விருப்பத்தைப் பொருத்ததாயிருந்தது. ஆனால் வட்சுநதிப் பிரதேசத்தில் நடந்த யுத்தம் பல சமூகத்திற்கு ஒரு சேனாதிபதி இந்திரனைச் சிருஷ்டித்து விட்டது.
____________________________________________________
* இன்றைக்கு நூற்று எண்பது தலைமுறைகளுக்கு முந்திய ஆரிய சமூகத்தின் கதை இது. இவர்களுடைய சந்ததியாரில் சிலர், அப்பொழுது இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். விவசாயமும் தாமிர உபயோகமும் அவர்களிடை நன்கு பரவிவிட்டது. மெதுவாகப் புகுந்த அடிமை வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட விரும்பினார்கள்.