“அந்த ஜனங்கள் எப்படி இருப்பார்கள், புருதான?”
“கட்டை குட்டையாக, நல்ல கறுப்பு நிறம். அழகற்ற உடல்; மூக்கைக் காணவே முடியாது; முகத்தோடு அமுங்கி இருக்கும். இதோடு ஒரு கெட்ட பழக்கமும் அவர்களிடத்திலிருக்கிறது. மனிதர்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள்.”
“என்ன! மனிதர்களை விற்பனை செய்வதா?”
“ஆம், அவர்களை ‘அடிமைகள்’ என்று அழைக்கிறார்கள்.”
“அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் தோற்றத்தில் வேற்றுமை உண்டா?”
“இல்லை. ஆனால் அடிமைகள் ஏழைகளாயும், உரிமையற்றவர்க ளாயுமிருக்கிறார்கள். அவர்களுடைய உடல்-ஏன் உயிருங் கூட எஜமானர்களுக்குச் சொந்தமாயிருக்கிறது.”
“அப்படிப்பட்ட ஜனங்களின் முகாலோபனம் ஏற்படாதபடி இந்திரன் காப்பாற்றுவானாக!”
“நல்லது நண்பா! நீ இன்னும் தக்களிளைச் சுழற்றிக் கொண்டே இருக்கிறாயே, வேள்விக்குப் போக வேண்டாமா?”
“ஏன் போக வேண்டாம்? இந்திரனுடைய கிருபையினால் நல்ல உணவும் கால்நடைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. அந்த இந்திரனுடைய விழாவில் எந்தத் துர்ப்பாக்கியசாலி கலந்து கொள்ளாமலிருப்பான்?”
“உன் வீட்டுக்காரி எப்படியிருக்கிறாள்? இப்பொழுது அவள் வெளியே தென்படுவதே இல்லை?”
“நீயும் நிமிண்ட ஆரம்பித்து விட்டாயா?”
“நான் நிமிண்டவாவது. நீ தானே தெரிந்திருந்தும் இந்தக் கிழ வயதில் போய் ஓர் இளம் பெண்ணை மணம் செய்து கொண்டாய்?”
“ஐம்பது வயதில் கிழப்பருவம் வந்து விடுகிறதா?”
“ஆனால் ஐம்பதுக்கும் இருபதுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்?”
“ஏன், அவள் அன்றே மறுத்திருக்கலாமே?”
“அன்று தினம் நீ உன்னுடைய தாடியையும் மீசையையும் மழுங்கச் சிரைத்து விட்டு, பதினெட்டு வயது வாலிபன் மாதிரிக் காட்சியளித்தாய். மேலும் உஷாவினுடைய தாய் தந்தையாரின் கவனம் உன்னுடைய ஐம்பது வயதுப் பருவத்திலா சென்றது? உன்னுடைய கால்நடைகள் மீதல்லவா சென்றது!”
“சரி, அந்தப் பேச்சை விடு. உன்னைப் போன்ற வாலிபர்களுக்கு
எப்பொழுதும்....”