அதிகாரம் 7
2 மேலும் இரகுவேல் தோபியை உற்று நோக்கிய பின் தம் மனைவி அன்னாளிடம், "இவ்விளைஞனைப் பார்த்தால் என் உறவினர் போல் தோன்றுகிறது அன்றோ?" என்று சொன்னார்.
3 இவ்வாறு பேசின பின் இரகுவேல், "என் சகோதரர்களான இளைஞர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் நெப்தலி குலத்தினர்@ நினிவே நகரில் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம்" என்றனர்.
4 மேலும் அவர், "என் சகோதரன் தொபியாசை அறிவீர்களோ?" என்று கேட்க, அவர்கள், "ஆம், அறிவோம்" என்றனர்.
5 பின்னர் இரகுவேல் தொபியாசைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கையில் கடவுளின் தூதர் அவரைப் பார்த்து, "நீர் விசாரித்த அந்தத் தொபியாசு இவனுடைய தந்தை தான்" என்றார்.
6 அப்போது இரகுவேல் எழுந்து தாவி அவனை முத்தமிட்டு அழுதார். பின்னர் அவன் தோளின் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டு,
7 மகனே, நீ நல்லவனும் உத்தமனுமான மனிதனின் மகன். ஆகவே, உனக்கு ஆசீர் உண்டாகுக என்றார்.
8 அந்நேரத்தில் அவர் மனைவி அன்னாளும், அவர்களுடைய மகள் சாராளும் கண்ணீர் சொரிந்து அழத் தொடங்கினர்.
9 பேசி முடிந்ததும், ஆடு அடித்து, விருந்து செய்ய இரகுவேல் கட்டளையிட்டார். பின்பு பந்தியில் அமரும் படி அவர்களை அழைத்தார்.
10 அதற்குத் தோபி, "நீர் முதன் முதல் எனது விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்து, உம் மகள் சாராளை எனக்குத் தருவதாக வாக்குறுதி கொடுத்தாலொழிய நான் சாப்பிடமாட்டேன், குடிக்கவும் மாட்டேன்" என்றான்.
11 இதைக் கேட்டவுடன் இரகுவேல் திடுக்கிட்டுப் பயந்தான். ஏனெனில், சாராளிடம் உறவு வைத்திருந்த அவளுடைய ஏழு கணவர்களுக்கும் நேரிட்டதை நினைத்து, இவனுக்கும் அவ்விதமே நிகழக்கூடும் என்று அஞ்சி இருமனப் பட்டவராய் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.
12 இது கண்டு கடவுளின் தூதர் அவரை நோக்கி, "அவளை இவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க நீர் அஞ்ச வேண்டாம். ஏனெனில் தெய்வ பயமுள்ள இவனுக்கு உம் மகள் மனைவியாக உடன்படத்தான் வேண்டும். இதனால் அன்றோ வேறு மனிதர் அவளோடு உறவு கொள்ள முடியாது போயிற்று?" என்றார்.
13 அதற்கு இரகுவேல், "கடவுள் என் மன்றாட்டுகளையும் என் கண்ணீர்களையும் தமது திருமுன் ஏற்றுக் கொண்டார் என்பது பற்றி இப்போது எனக்கு ஐயமே இல்லை.
14 மோயீசன் கட்டளையிட்டபடியே இவள் தன் உறவினனோடு மணம் புரிய வேண்டியதாயிற்று. அதனால் தான் கடவுள் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே ஐயம் வேண்டாம். நான் அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன்" என்றார்.
15 பின்னர் தம் மகளின் வலக்கையைப் பிடித்துத் தோபியின் வலக்கையோடு சேர்த்து வைத்து, ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் உங்களோடு இருப்பாராக! அவரே உங்கள் இருவரையும் இணைத்துத் தம் நிறையாசீர் உங்களிடம் நிறைவேறச் செய்வாராக!" என்றார்.
16 மேலும் ஒரு தாளை எடுத்து அதில் திருமணப் பதிவு செய்தனர்.
17 கடவுளைப் புகழ்ந்து பாடிய பின் விருந்து உண்டனர்.
18 இரகுவேல் தம் மனைவி அன்னாளைத் தம்மிடம் அழைத்து இன்னொரு மணவறையைத் தயாரிக்கச் சொன்னார்.
19 அதன் பிறகு அவர் தம் மகள் சாராளை அதில் கூட்டிக்கொண்டு போய்க் கண்ணீர் விட்டு அழுதார்.
20 மகளே, நீ தைரியமாயிரு. முன்பு நீ பட்ட துயரத்திற்கு எல்லாம் சேர்த்து விண்ணக இறைவன் உனக்கு இப்போது இன்பத்தை அருள்வார், என்று மொழிந்தார்.