அதிகாரம் 4
2 அவன் மற்ற நகர்களுக்கும், அவற்றின் ஆலயங்களுக்கும் செய்தது போல், யெருசலேமுக்கும் ஆண்டவரின் ஆலயத்திற்கும் செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினர்,
3 பிறகு அவர்கள் சமாரியா நாடெங்கும் அதைச் சூழ்ந்த இடங்களுக்கும், எரிக்கோவுக்கும் ஆட்களை அனுப்பி, மலைகளின் முகடுகளை எல்லாம் ஏற்கனேவே கைப்பற்றிக் கொண்டனர்.
4 அன்றியும் தம் ஊர்களைச் சுற்றிலும் மதில்களை எழுப்பிப் போர் காலத்திற்கு வேண்டிய தானியங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
5 மேலும், தொத்தாயினுக்கு அருகில் இருந்த பரந்த வெளிக்கு எதிராக அமைந்துள்ள எஸ்த்ரேலோன் ஊருக்கு நேராக இருக்கும் குடிகளுக்கும், எதிரிகள் வரக்கூடுமான இடங்களில் குடியிருந்த அனைவருக்கும் குரு எலியாக்கீம் செய்தி அனுப்பினார்.
6 அதன் மூலம் யெருசலேமுக்குச் செல்லும் மலைப்பாதைகளையும், மலைகளுக்கிடையே உள்ள கணவாய்களையும் கைப்பற்றிக் காக்கவேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருந்தார்.
7 ஆண்டவரின் குரு எலியாக்கீம் கட்டளையிட்டபடியே இஸ்ராயேல் மக்கள் நடந்து கொண்டனர். மேலும் ஆண், பெண் அனைவரும் வெகு உருக்கமாக ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டனர்.
8 தங்களையே தாழ்த்தி, நோன்பிலும் செபத்திலும் ஈடுப்பட்டனர். குருக்கள் மயிராடை அணிந்து கொண்டனர்.
9 சிறுவர்கள் ஆலயத்தின் முன் முகம் குப்புற விழுந்து மன்றாடினர். ஆண்டவரின் பீடமோ மயிராடையால் மூடப்பட்டிருந்தது.
10 அவர்கள் ஒரே மனமாய் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை நோக்கி, எதிரிகள் எங்கள் சிறுவர்களைக் கொலை செய்யாதவாறும் எம் மனைவியரைப் பிரித்து விடாதவாறும் எம் நகர்களைப் பாழாக்காதவாறும் எம் புனித பொருட்களை மாசுபடுத்தாதவாறும் புறவினத்தார் முன் நாங்கள் அவமானம் அடையாதவாறும் எங்களைக் காத்தருள வேண்டும்" என்று உரத்த குரலில் மன்றாடினார்கள்.
11 அப்போது ஆண்டவரின் குரு எலியாக்கீம் நாடெங்கும் சென்று இஸ்ராயேலரை நோக்கி,
12 நீங்கள் ஆண்டவர் திருமுன் நோன்பிலும் செபத்திலும் நிலைத்திருந்தால், ஆண்டவர் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
13 ஆண்டவரின் அடியார் மோயீசனை நினைத்துக் கொள்ளுங்கள். அமலேக்கியர் தமது வலிமை, ஆற்றல், படைப் பலம், கேடயம், தேர், குதிரைப்படை முதலியவற்றை நம்பியிருந்தனர். மோயீசனோ படைக் கருவிகளைக் கொண்டல்ல, தமது தூய செபங்களினாலேயே அவர்களை முறியடித்தார்.
14 நீங்கள் தொடங்கியுள்ள இந்தப் பக்தி நிறை செயலில் நிலைத்து நின்றால், இஸ்ராயேலின் எதிரிகள் அனைவரும் அவ்வாறே நாசமடைவார்கள்" என்றார்.
15 அவரது அறிவுரையைக் கேட்ட மக்கள் எல்லாரும் ஆண்டவரை மன்றாடி, இறைவன் திருமுன் (தங்கள் பக்தி முயற்சியில்) நிலைத்திருந்தனர்.
16 அவர்களது பக்தி எத்தன்மையதெனில், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுப்பவர்கள் கூட மயிராடை அணிந்து, தலையில் சாம்பலைத் தூவிக் கொண்டு ஆண்டவருக்குப் பலி செலுத்தி வந்தனர்.
17 ஆண்டவர் தம் மக்களாம் இஸ்ராயேலைச் சந்தித்தருள வேண்டும் என்று எல்லாரும் முழுமனத்துடனே வேண்டிக் கொண்டனர்.