அதிகாரம் 7
2 அவனது படையில் ஒரு லட்சத்திருபதினாயிரம் காலாட்படையினரும் இருபத்திரண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். மேலும் ஏற்கெனவே போரில் சிறைப்பட்டு மாநிலங்களிலும் பல நகர்களிலுமிருந்து கொண்டு வரப்பட்டுப் படையில் இணைக்கப்பட்டிருந்த ஆடவர்கள் ஏராளமாய் இருந்தனர்.
3 இவர்கள் எல்லாரும் இஸ்ராயேல் மக்களுடன் போரிடத் தம்மைத் தயாரித்தனர். அவர்கள் புறப்பட்டுப் போய், பெல்மா முதல் எஸ்திரேலோனுக்கு எதிரேயுள்ள கேல்மோன் வரையிலும் கணவாய் வழியே நடந்து சென்று தொத்தாயினை அடுத்த செங்குத்தான பாறை வரையிலும் அணிவகுத்து நின்றனர்.
4 அப்பெரும் கூட்டத்தைக் கண்ட இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலை மேல் சாம்பலைத் தூவி, நெடுங்குப்புற விழுந்து இஸ்ராயேலின் கடவுள் தம் மக்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று ஒருமனமாய் வேண்டிக்கொண்டனர்.
5 பின் தங்கள் படைக் கருவிகளை எடுத்துக்கொண்டு மலைகளுக்குள்ளே இருந்த குறுகிய வழிகளில் நின்று இரவு பகலாய்க் காவல் புரிந்து வந்தனர்.
6 ஒலொபெர்னெஸ் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில் பெத்தூலியா நகருக்குத் தண்ணீர் கொடுத்து வந்த ஊற்றைக் கண்டுபிடித்தான். அந்த ஊற்றின் நீர் நகருக்கு வெளியே தென் புறமுள்ள ஒரு கால்வாய் மூலம் நகருக்கு வந்துக்கொண்டிந்தது. அதைக் கண்ணுற்ற அவன் அக்கால்வாயை உடைக்கக் கட்டளையிட்டான்.
7 ஆனால் நகர மதில்களின் அருகே வேறு சில நீரூற்றுகள் இருந்தன. எனவே மக்கள் மறைவாய் அங்குச் சென்று கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை மொண்டு அரையும் குறையுமாய்த் தாகத்தைத் தணித்துக் கொண்டனர்.
8 அதைக் கண்டு அம்மோனியரும் மோவாபியரும் ஒலொபெர்னெசிடம் போய் அவனை நோக்கி, "ஐயா, இஸ்ராயேல் மக்கள் வில், வேல் முதலிய ஆயுதங்களை நம்புவதே இல்லை@ மலைகளும் செங்குத்தான குன்றுகளுமே அவர்களுக்கு ஆதரவாகவும் அரண்களாகவும் இருக்கின்றன.
9 ஆதலால் அவர்களோடு போரிடாமலே நீர் அவர்களை வெல்லவேண்டும் என்றால், அவர்கள் தண்ணீர் மொள்ளாதபடி நீரூற்றருகில் காவலர்களை நிறத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வாளின்றி அவர்களைக் கொல்ல இயலும்@ அல்லது அவர்கள் தளர்வுற்றுச் சரணடைவர். ஏனெனில் தங்கள் நகர் மலைகள் நடுவே இருப்பதால், அவற்றை யாரும் கைப்பற்ற முடியாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்" என்றனர்.
10 இதைக்கேட்டு ஒலொபெர்னெசும் அவனுடைய வீரர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொரு நீரூற்றைச் சுற்றிலும் நூறுபேரை நிறுத்திக் காவல் புரியும்படி அவன் கட்டளையிட்டான்.
11 அவ்வாறு இருபது நாள் காவலுக்குப் பிறகு பெத்தூலியா நகரின் ஊருணிகளும் நீர்க் குட்டைகளும் வறண்டுபோயின. குடிகள் எல்லாரும் ஒரு நாளைக்குக் கூடத் தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் மக்கள் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் அளந்து தான் கொடுக்கப்பட்டது.
12 அப்போது ஆண், பெண், இளைஞர், சிறுவர் அனைவரும் ஓசியாசிடம் கூடி வந்தனர். எல்லாரும் ஒருமிக்கக் கூச்சலிட்டு, "கடவுள் உமக்கும் எமக்கும் நடுவராய் இருந்து தீர்ப்புச் செய்யட்டும்! நீர் அசீரியருடன் சமாதானமாய் இருக்க மறுத்து விட்டதால், நமக்குத் தீங்கு நேர்ந்துற்றது.
13 ஆகையால் தான் கடவுளும் நம்மை அவர்கள் கையில் ஒப்புவித்து விட்டார்.
14 ஏனெனில் நாம் அவர்களுக்கு முன்பாக நாவறண்டு பேரழிவிற்கு உள்ளாகியும் நமக்கு உதவி செய்பவர் எவருமிலர்.
15 ஆகவே நாம் ஒலொபெர்னெசின் கையில் சரணடைவது பற்றி எல்லா மக்களையும் ஒன்றுகூட்டி ஆலோசனை கேளும்.
16 ஏனெனில் எங்கள் மனைவியரும் மக்களும் எங்கள் கண் முன்பாக இறந்து போனதைப் பார்த்த பின்பு, நாங்கள் எல்லா மானிடரின் பழிப்புக்கும் ஆளாவதை விடச் சிறைப்பட்டாயினும் உயிரோடு கடவுளைத் துதிப்பதே மேல் எனத் தோன்றுகிறது.
17 நீர் ஒலொபெர்னெசின் படை வீரரிடம் நகரை ஒப்புவிக்க வேண்டும் என்று விண்ணையும் மண்ணையும், எம் பாவங்களுக்குத் தக்கவாறு எம்மைப் பழிவாங்குகிற எம் முன்னோர்களின் கடவுளையுமே சாட்சியாக வைத்துச் சொல்கிறோம். தாகத்தால் பலநாள் துன்பப்பட்டு உயிர் வாழ்வதை விட, வாளுக்கு இரையாகி விரைவில் சாவதே மேல்" என்றனர்.
18 அவர்கள் அவ்வாறு பேசி முடிந்ததும் சபையார் அனைவரும் அழுது புலம்பிப் பல மணி நேரம் ஒரே குரலாய்க் கடவுளை நோக்கி ஓலமிட்டனர்.
19 எங்கள் முன்னோர்களோடு நாங்களும் பாவம் செய்தோம்@ அநியாயம் பண்ணினோம்@ அக்கிரமமாய் நடந்தோம்.
20 எனவே தயையுள்ளவரான நீர் எங்கள் மேல் இரங்கியருளும்@ அல்லது உமது சாட்டையால் எங்களை அடித்து எங்கள் அக்கிரமங்களுக்காக எங்களைப் பழி வாங்கும். உம்மை அறியாத புறவினத்தாரின் கையில் உம்மைத் துதிக்கிற எங்களை ஒப்புவிக்க வேண்டாம்.
21 ஒப்புவிப்பீராகில் புறவினத்தார் எங்களைக் கேலி செய்து, ~இவர்களின் கடவுள் எங்கே?~ என்று இகழ்ந்து பேசுவார்கள் அல்லரோ?" என்றனர்.
22 இவ்விதமாக அழுது புலம்பி ஓலமிட்டுச் சோர்ந்த பின் மக்கள் அமைதியாய் இருந்தனர்.
23 அப்பொழுது ஓசியாஸ் கண் கலங்க எழுந்து அவர்களைப் பார்த்து, "சகோதரரே, தைரியமாயிருங்கள். இன்னும் ஐந்து நாள் வரை பொறுமையோடு ஆண்டவரின் உதவிக்காகக் காத்திருப்போம்.
24 ஒருவேளை அவர் அதற்குள் சினம் தணிந்து தமது திருப்பெயரை மகிமைப்படுத்துவார்.
25 அந்த ஐந்து நாட்களுக்குள் நமக்கு உதவி கிடைக்காவிடில், நீங்கள் சொன்னது போல் செய்வோம்" என்றான்.