சிவாஜியின் நிலவருவாய்முறை அகமது நகரில் மாலிக் ஆம்பர் புகுத்திய நடைமுறையை ஒட்டியே இருந்தது. காதி என்ற அளவுகோலைப் பயன்படுத்தி நிலங்கள் அளக்கப்பட்டன. நெல்வயல்கள், தோட்ட நிலங்கள், மலைப்பாங்கான நிலங்கள் என நிலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே நிர்வாக அமைப்பிலிருந்த தேஷ்முக்குகள், குல்கர்னிகள் ஆகிய அதிகாரிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கர்கூன்கள் என்று அழைக்கப்பட்ட தனது வருவாய்த்துறை அதிகாரிகளை அவர் நியமித்தார்.
பன்ஹலா கோட்டை
சௌத் மற்றும் சர்தேஷ்முகி என்ற வரிகள் மராட்டிய நாட்டில் வசூலிக்கப்படவில்லை. அவை முகலாயருக்கு மற்றும் தக்காண சுல்தானியங்களுக்குட்பட்ட அண்மைப்பகுதிகளில் வகுலிக்கப்பட்ட வரிகளாகும். மராட்டியப் படையெடுப்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிலவரியின் நான்கில் ஒரு பகுதியை சொத்து வரியாக அப்பகுதிமக்கள் செலுத்தினர். மராட்டியர்கள் தங்கள் பரம்பரை உரிமைக்குட்பட்ட இடங்களாகக் கருதிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் செலுத்திய நிலவரியின் பத்து சதவிகித கூடுதல் வரியே சர்தேஷ்முகி ஆகும்.
சிவாஜி படைத்துறை நிர்வாகத்தில் மேதமை பெற்றுத்திகழ்ந்தார். அவரது படைகள் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தன. அவரது நிலையான படையில் 30,000 முதல் 40,000 வரையிலான குதிரை வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். குதிரைப்படை ஹவில்தார்களின் மேற்பார்வையில் இருந்தது. வீரர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்பட்டது. மராட்டியக் குதிரைப்படையில் இரண்டு பிரிவுகள் இருந்தன.
1. பர்கிர்கள் - அரசின் மேற்பார்வையில் நேரடியாக பராமரிக்கப்பட்டது.