சிவாஜியின் இந்த போர் வெற்றிகளுக்குபிறகு மராட்டியப் பகுதி மக்கள் அவரை ஒரு மாவீரனாக போற்றத் தொடங்கினர். அவரது படையில் சேர்ந்து பணியாற்றவும் பலர் முன்வந்தனர். சிவாஜி தலைமையில் மராட்டியர் எழுச்சி பெற்றுவருவதை முகலாயப் பேரரசர் அவுரங்ககீப் அச்சத்துடனேயே கவனித்து வந்தார். அவர் தக்காண ஆளுநராக இருந்த ஷெபிஷ்டாகான் என்பவரை சிவாஜிக்கெதிராக அனுப்பிவைத்தார். முகலாயப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட சிவாஜி மீண்டும் ஒரு முறை துணிச்சலாக செயல்பட்டு ஷெயிஷ்டகானின் பூனா ராணுவ முகாம்மீது அதிரடித்தாக்குதலை நடத்தி அவரது மகனைக் கொன்றதுடன் அவரையும் காயப்படுத்தினார்.
சிவாஜி-ஆரம்ப வாழ்க்கை
சிவாஜியின் இந்த துணிச்சல் நடவடிக்கையால் ஷெயிஷ்டகானின் புகழுக்கு இழுக்கு ஏற்பட்டது. அவுரங்கசீப் அவரை திரும்ப அழைத்துக் கொண்டார். 1664ல் சிவாஜி முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் துறைமுகத்தைத் தாக்கி அதைச் சூறையாடினார்.
இம்முறை அவுரங்கசீப் சிவாஜிக்கு எதிராக ஆம்பர் நாட்டு ராஜா ஜெய்சிங்கை அனுப்பிவைத்தார். ஜெய்சிங் படைகளை நன்கு தயார் செய்து கொண்டு சிவாஜியின் குடும்பமும், கருவூலமும் இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகையிட்டார். வேறு வழியில்லாத நிலையில், சிவாஜி ஜெய்சிங்குடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். 1665 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தாகியது. அவ்வுடன் படிக்கைப்படி, சிவாஜி தம்மிடமிருந்த 35 கோட்டைகளில் 23 கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார். முகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக இருக்கவும், சேவையாற்றவும் வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எஞ்சியிருந்த 12 கோட்டைகள் சிவாஜியிடமே விடப்பட்டன. பீஜப்பூர் அரசுக்குச் சொந்தமான ஒரு சில பகுதிகளை வைத்திருக்கும் உரிமை சிவாஜிக்கு அளிக்கப்பட்டது. முகலாயருக்கு தாமே நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விலக்குமாறு சிவாஜி கேட்டுக் கொண்டதால், அவரது சிறுவயது மகனான ஷாம்பாஜிக்கு மன்சப் 5000 என்ற தகுதிநிலை வழங்கப்பட்டது.