பிந்தைய வேதகாலத்தில் ஆரியர்கள் மேலும் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். கங்கை சமவெளியில் ஆரியர்கள் தங்களது இருப்பிடத்தை விரிவு படுத்திய விவரங்களை சதபத பிராமணம் குறிப்பிடுகிறது. பிந்தைய வேத இலக்கியங்களில் பல்வேறு ஆரிய குலங்கள் மற்றும் அரசுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. பரந்த அரசுகள் எழுச்சி பெற்றது இக்காலத்திய சிறப்புக் கூறாகும். தொடக்கத்தில் குரு மற்றும் பாஞ்சாலம் ஆகிய அரசுகள் புகழ்பெற்று விளங்கின. குரு அரசின் புகழ்மிக்க அரசர்களாக பரிக்ஷத், ஐனமேஐயன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். பாஞ்சாலர்களின் சிறந்த அரசர் பிரவாஹன ஜெய்வலி என்பவராவார். புலவர்களை இவர் போற்றினார். குரு, பாஞ்சால அரககளின் வீழ்ச்சிக்குப் பிறகு கோசலம், காசி, விதேகம் போன்ற அரசுகள் முக்கியத்துவம் பெற்றன. அஜாதசத்ரு காசியின் புகழ்மிக்க அரசர். மிதிலை நகரை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் அரசர் ஜனகர். யக்ஞவாக்யர் என்ற புலவர் இவரது அவையை அலங்கரித்தார். கிழக்குக் கோடியில் மகதம், அங்கம், வங்கம் போன்ற அரசுகள் இருந்தன. பிந்தைய வேத இலக்கியங்களில் இந்தியா மூன்று பெரும்பிரிவுகளாக குறிக்கப்பட்டுள்ளன. ஆரியவர்த்தம் (வட இந்தியா மத்யதேசம் மத்திய இந்தியா) தட்சிணபாதம் (தென்னிந்தியா).
அரசியல் நிலை
பிந்தைய வேத காலத்தில் பெரிய அரசுகள் தோன்றியதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இக்காலத்தில் பல குலங்கள் அல்லது 'ஜன'ங்கள் ஒன்றிணைந்து 'ஜனபதங்கள்' உருவாயின. அரசின் பரப்பளவு பெருகியதால் அரசரின் அதிகாரமும் அதிகரித்தது. தனது வலிமையைப் பெருக்கும் நோக்கத்துடன் அரசர் பல்வேறு சடங்குகளையும், வேள்விகளையும் செய்தார். ராஜசூயம் (முடிசூட்டு விழா) அஸ்வமேதம் (குதிரை வேள்வி) மற்றும் வாஜபேயம் (தேர்ப் போட்டி) ஆகியனவும் இவற்றுள் அடங்கும். ராஜ விஸ்வஜனன், அகில புவனபதி, ஏகரதன், சாம்ராட் போன்ற பட்டங்களையும் அரசன் சூட்டிக் கொண்டான்.
புரோகிதர், சேனானி, கிராமணி தவிர பிந்தைய வேத காலத்தில் மேலும் பல புதிய அதிகாரிகள் ஆட்சித் துறையில் பங்கு வகித்தனர். கருவூல அதிகாரி, வரிதண்டுவோர், அரச தூதர் ஆகியோரும் இதிலடங்கும். கிராம சபைகள் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தன. பிந்தைய வேத காலத்தில் 'சபா', 'சமிதி' என்ற அவைகள் செல்வாக்கிழந்தன.
பொருளாதார நிலை
பிந்தைய வேதகாலம்
இக்காலத்தில் இரும்பின் உபயோகம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மக்கள் மேலும் பல வனங்களை அழித்து விளைநிலங்களைப் பெருக்கினர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்கியது. புதிய வகை கருவிகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டன. பார்லி தவிர, நெல் மற்றும் கோதுமை பயிரிடப்பட்டன. நிலத்துக்கு உரமிடுதல் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பல்வேறு தொழில்களும் வளர்ச்சியடைந்தன. உலோக வேலைப்பாடுகள் தோல்பொருட்கள், தச்சுத்தொழில், மட்பாண்டங்கள் போன்றவை பெரும் வளர்ச்சியடைந்தன. உள்நாட்டு வாணிபத்தோடு அயல்நாட்டு வாணிபமும் பெருகின. கடல் வாணிபம் பிந்தைய வேதகாலத்தில் வழக்கிலிருந்தது. பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. வாணியர் என்ற சமூக அமைப்பும் இக்காலத்தில் தோன்றியது. வைசியரும் வாணிகத்தில் ஈடுபட்டனர்.
'கணங்கள்' எனப்பட்ட வாணிகக் குழுக்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர். ரிக்வேத காலத்திலிருந்த 'நிஷ்கம்' என்ற நாணயம் தவிர, சதமானம், கிருஷ்ணலம் என்றழைக்கப்பட்ட தங்க வெள்ளி நாணயங்களும் செலாவணியாக புழக்கத்திலிருந்தன.