வளைவுகளும் குவிமாடங்களும் கலந்து கட்டப்பட்ட கட்டிட அமைப்புகளை துக்ளக்குகள் உருவாக்கினர். விலை குறைவானதும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான சாம்பல் நிலப் பாறைக் கற்களையும் அவர்கள் பயன்படுத்தினர். கியாசுதீன் துக்ளக் காலத்தில் துக்ளகாபாத் அரண்மனை வளாகம், அதனுள் அமைந்துள்ள அழகிய ஏரி ஆகியன அமைக்கப்பட்டன. உயர்ந்த மேடைமீது கியாசுதீனின் கல்லறையை முகமது பின் துக்ளக் அமைத்தார். டெல்லியிலுள்ள கோட்லா கோட்டை பிரோஸ் துக்ளக்கின் படைப்பாகும். லோடிகளின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாக டெல்லியிலுள்ள லோடி தோட்டங்களைக் கூறலாம்.
இசை
அமீர் குஸ்ரு
சாரங்கி, ரபாப் போன்ற புதிய இசைக் கருவிகள் அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. கோரா, சானம் போன்ற பல புதிய ராகங்களை அமீர் குஸ்ரு அறிமுகம் செய்தார். இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைகளையும் அவர் உருவாக்கினார். கிதார் இசைக் கருவியும் அவரது கண்டுபிடிப்பே என்றும் கூறுவர். பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ராகதர்பண் என்ற இந்திய இசைநூல் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பீர்போதன் என்ற சூஃபித்துறவி அக்காலத்திய புகழ்மிக்க இசைமேதைகளில் ஒருவர். குவாலியரைச் சேர்ந்த ராஜா மன்சிங் சிறந்த இசைப்பிரியர். மன்கவுத்துகல் என்ற இசை நூல் தொகுக்கப்படுவதற்கு அவர் பெரும் ஊக்கமளித்தார்.
இலக்கியம்
டெல்லி சுல்தான்கள் கல்வி, இலக்கியத்தையும் போற்றி வளர்த்தனர். அவர்களில் பலர் அராபிய மற்றும் பாரசீக மொழிகளை நேசிப்பவர்களாக இருந்தனர். பாரசீகத்திலிருந்து பல அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்தனர். ஆட்சியாளர்கள் பாரசீக மொழியை பெரிதும் ஊக்குவித்தனர். சமயவியல், கவிதை தவிர வரலாறு எழுவதையும் அவர்கள் பெரிதும் ஆதரித்தார். ஒருசில சுல்தான்களின் அரசவையில் வரலாற்று அறிஞர்களும் இடம் பெற்றிருந்தனர். ஹசன் நிசாமி, மின் ஹஜ்-உஸ்-சிராஜ், சியாவுதீன் பரானி, ஹம்ஸ்-சிராஜ் அபிப் ஆகியோர் அக்காலத்திய புகழ்மிக்க வரலாற்று அறிஞர்கள். துக்ளக் வம்சத்தின் வரலாற்றை பரானி தாரிகி, பிரோஸ் ஷாஹி என்ற பெயரில் எழுதினார். 1260 ஆண்டு வரையிலான முஸ்லிம் அரச குலங்களின் வரலாற்றை தபாகத்-இ-நசாரி என்ற பெயரில் மின்ஹஜ்-உஸ்- சிராஜ் எழுதினார்.