ராணுவத் துறை திவானி அர்ஸ் என அழைக்கப்பட்டது. அரிஸ்-இ-முமாளிக் என்ற அதிகாரி அதன் தலைவர். படைவீரர்களை சேர்ப்பதும், ராணுத்துறையை நிர்வகிப்பதும் அவரது பொறுப்பாகும். அவர் படைத் தளபதி அல்ல என்பதை குறிப்பிடவேண்டும். சுல்தானே படைக்குத் தளபதி ஆவார். பால்பன் ஆட்சிக் காலத்தில்தான் படைத்துறை உருவாக்கப்பட்டது. படையின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டிய அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் அத்துறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. குதிரைகளுக்கு சூடுபோடும் முறையையும், வீரர்களுக்கான ஊதியத்தை பணமாக வழங்கும் முறையையும் அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார். டெல்லி சுல்தானியத்தில் குதிரைப் படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
திவானி ரிசாலத் என்பது சமய விவகாரங்கள் துறை. அதன் தலைவர் சதர் என்ற அதிகாரி. மசூதிகள், கல்லறைகள் மற்றும் மதரசாக்கள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் அந்த துறை மானியங்களை வழங்கியது. நீதித்துறையின்
டெல்லி சுல்தானிய படை
தலைவராக தலைமைக் காஸி இருந்தார். சுல்தானியத்தின் பல்வேறு பகுதிகளிலும் காஸிகள் அல்லது நீதிபதிகள் நியமிக்கப் பட்டிருந்தனர். உரிமையியல் குறித்த வழக்குகளில் இஸ்லாமிய தனி நபர் சட்டம் அல்லது ஷாரியா பின்பற்றப்பட்டது. இந்துக்களுக்கு அவர்களது தனிச் சட்டம் வழக்கிலிருந்தது. அவர்களது வழக்குகளை பெரும்பாலும் கிராம பஞ்சாயத்துக்களே தீர்த்து வைத்தன. கிரிமினல் சட்டங்களைப் பொறுத்தவரை, அவ்வப்போது சுல்தான்கள் வெளியிடும் ஆணைகளும் விதிமுறைகளும் சட்டங்களாக பின்பற்றப்பட்டன. திவானி இன்ஷா என்பது போக்குவரத்துத் துறை. ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துகளை அது கவனித்து வந்தது.
உள்ளாட்சி நிர்வாகம்
டெல்லி சுல்தானியத்தில் மாகாணங்கள் இக்தாக்கள் எனப்பட்டன. தொடக்கத்தில் அவை உயர்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் மாகாண ஆளுநர்கள் முக்திகள் அல்லது வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது, நிலவரி வசூலிப்பது அவர்களது முக்கிய பணியாகும். மாகாணங்கள் ஒவ்வொன்றும் ஷிக்தா என்ற மாவட்டங்களாகவும், ஷிக்தா ஒவ்வொன்றும் பல பர்கானாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஷிக்தாரின் ஆட்சியாளர் ஷிக் எனப்பட்டார். பர்கானா ஒவ்வொன்றிலும் பல கிராமங்கள் இருந்தன, கிராமத்தின் தலைவர் அமில். ஆட்சியின் அடிப்படை அலகு கிராமம். கிராம கணக்கர் பட்வாரி என்பவராவார்.