தமிழ் இலக்கிய வளர்ச்சி சோழர் காலத்தில் அதன் உச்சத்திற்கே சென்றது எனலாம். திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி என்ற நூல்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர்புராணம் சோழர் காலத்தில் படைக்கப்பட்ட சிறந்த நூலாகும். முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை விவரிப்பது ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி. ஒட்டக்கூத்தரின் மூலருலா மூன்று சோழ மன்னவர்களைப் பற்றியதாகும். புகழேந்திப் புலவர் நளவெண்பாவைப் படைத்தார். தமிழ் இலக்கண நூல்களான கல்லாடனாரின் கல்லாடம் என்ற நூலும், சமண முனிவரான அமிர்தசாகரர் படைத்த யாப்பெருங்கலமும், பவநந்தி முனிவரின் நன்நூலும், புத்தமித்திரர் படைத்த வீரசோழியம் என்ற நூலும் சோழர் காலத்தைச் சேர்ந்தவையே!
கலை, கட்டிடக் கலை
தஞ்சை பெரிய கோயில்
திராவிடப்பாணி கலை, கட்டிடக் கலை சோழர் காலத்தில் ஏற்றம் பெற்றது. சோழர்கள் ஏராளமான கோயில்களை எழுப்பியுள்ளனர். சோழர்காலக் கோயிலின் தனிச்சிறப்பு அதன் விமானமாகும். முற்காலச் சோழர்களின் ஆலயங்களை புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தா மலை, கொடும்பாளூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசநல்லூர் ஆகிய இடங்களில் காணலாம். முதலாம் ராஜராஜனால் தஞ்சையில் எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோயில் தென்னிந்தியக் கட்டிடக்கலைக்கு மணிமுடி போன்றதாகும். அக்கோயிலில் விமானம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம் என்ற முக்கிய பகுதிகள் உள்ளன.
சோழர்கால நடராசர் சிலை
கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்ட சிவாலயம் சோழர்கால கோயில் கட்டிடக்கலையின் சிறப்புக்கு மற்றொரு முக்கிய சான்றாகும். தஞ்சை மாவட்த்திலுள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம், திருபுவனம் காம்பஹரீஸ்வரர் ஆலயம் ஆகிய ஆலயங்கள் பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சிற்பக் கலையின் வளர்ச்சிக்கும் சோழர்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர். தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆலயச் சுவர்களில் காணப்படும் ஏராளமான சிற்பங்களும், பெரிய உருவங்களும் சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்தவை. சோழர் காலத்திய செப்புத் திருமேனிகள் உலகப் புகழ் பெற்றவை. நடராசர் சிலை அவற்றில் குறிப்பிடத்தக்கது. தஞ்சை நார்த்தாமலை கோயில் சுவர்களில் சோழர் கால ஓவியங்களைக் காணலாம்.