சோழர் காலத்தில் ஜாதிமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்களும், ஷத்திரியரும் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர். சோழர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வலங்கை, இடங்கை சாதிப் பிரிவுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு ஜாதியினருக்கிடையே ஒற்றுமை காணப்பட்டது. பல்வேறு கிளை ஜாதிகளும் இருந்தன. மகளிர் நிலையில் முன்னேற்றம் ஏதுமில்லை. அரச குடும்பத்தாரிடையே 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் இருந்தது. கோயில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நாட்டிய மகளிர் அடங்கிய தேவதாசி முறை சோழர் காலத்தில்தான் தோன்றி வளர்ந்தது.
சோழர்கால நாணயங்கள்
சோழர் காலத்தில் வைணவமும், சைவமும் தழைத்தன. சோழ அரசர்கள், அரசிகளின் ஆதரவினால் ஏராளமான கோயில்கள் எழுப்பப்பட்டன. சோழர் காலத்தில் கோயில்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாகத் திகழ்ந்தன. மடங்களும் செல்வாக்கு பெற்றிருந்தன. வேளாண்மையும் தொழிலும் சிறந்து விளங்கின. காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டதாலும், நீர்ப்பாசன ஏரிகள் வெட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதாலும் வேளாண் தொழில் வளர்ச்சி பெற்றது. நெசவுத் தொழில், குறிப்பாக காஞ்சியில் பட்டு நெசவு புகழ்பெற்று விளங்கியது. கோயில்களிலும், வீட்டு உபயோகத்திற்கும் பெரும் தேவை இருந்ததால் உலோகத் தொழில் நன்கு வளர்ச்சியடைந்தது. வாணிபம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது. வாணிகக் குழுக்கள் செயல்பட்டன. வாணிகப் பெருவழிகள் நன்கு பராமரிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றாலான வெவ்வேறு மதிப்பிலான நாணயங்கள் புழக்கத்திலிருந்தன. சோழப் பேரரசு காலத்தில் சீனா, சுமத்ரா, ஜாவா, அரேபியா போன்ற நாடுகளோடு வாணிப உறவுகள் செழித்தன. குதிரைப் படைக்குத் தேவையான அரபு நாட்டுக் குதிரைகள் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டன.
கல்வி, இலக்கியம்
சோழர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கோயில்கள், மடங்கள் தவிர பல்வேறு கல்விக் கூடங்களும் கல்வியைப் பரப்பி வந்தன. எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனை ஆகிய இடங்களில் உள்ள சோழர்கால கல்வெட்டுகள் அங்கு செயல்பட்டுவந்த கல்லூரிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைக்கின்றன. வேதங்கள், இதிகாசங்கள் தவிர, கணிதம், மருத்துவம் போன்றவையும் இந்த கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களை நடத்துவதற்கு ஏராளமான நிலக் கொடைகள் வழங்கப்பட்டிருந்தன.