பண்டைக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணிகள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் வாலாபியில் இருந்த ஹீனயான பல்கலைக்கழகமும், நாளந்தாவிலிருந்த மகாயான பல்கலைக் கழகமும் குறிப்பிடத்தக்கவை. நாளந்தா பல்கலைக் கழகம் பற்றி யுவான் சுவாங் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். 'நாளந்தா'- என்ற சொல்லுக்கு 'அறிவை அளிப்பவர்' என்று பொருள். குப்தர் காலத்தில் முதலாம் குமார குப்தரால் இது நிறுவப்பட்டது. அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களும், ஹர்ஷரும் அதனை ஆதரித்தனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பண்டிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். திங்கநாகர், தர்மபாலர், ஸ்திரமதி, சிலபத்திரர் போன்றவர்கள் ஒரு சில புகழ்மிக்க பண்டிதர்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
நாளந்தா பல்கலைக் கழகம் |
நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள்மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீனப் பயணிகள் விவரித்துள்ள அந்த நிறுவனத்தின் பொலிவினை அவை உறுதிப்படுத்துவதாக உள்ளன. ஏராளமான வகுப்பறைகளும், மாணவர் விடுதியும் இருந்துள்ளன. சீனப் பயணியான இட்சிங் என்பவரது கூற்றுப்படி அங்கு மூன்றாயிரம் மாணவர் தங்கிப்படித்தனர். கோளரங்கம் மற்றும் மிகப்பெரிய நூலகம் மூன்று கட்டிடங்களில் செயல்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்வி பயில்வதற்குத் திரண்டனர் என்பதிலிருந்தே அதன் பெருமை விளங்குகிறது. உயர்கல்வி நிறுவனமாகவும் ஆய்வு நிறுவனமாகவும் அது விளங்கியது.