ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கனோஜ் நகரில் ஒரு சமயப் பேரவையைக் கூட்டினார். அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும் வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின. ஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அலகாபாத் மாநாடு
பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாடு பற்றி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடுகளில் ஒன்றாகவே அது இருத்தல் வேண்டும். அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஹர்ஷர் மீது யுவான் சுவாங் கொண்டிருந்த மதிப்பே இத்தகைய புகழுரைக்கு காரணம் என்று கூறலாம்.
ஹர்ஷரது ஆட்சிமுறை
ஹர்ஷர் நாணயங்கள் |