மேலைச்சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசிக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பே ஹர்ஷரின் முக்கிய போர் நடவடிக்கையாகும். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளும், இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டுகளும் இப்படையெடுப்பு பற்றி விவரமாகக் கூறுகின்றன. நர்மதை நதிக்குத் தெற்கே தனது அரசை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே ஹர்ஷர் சாளுக்கிய ஆட்சியாளருக்கெதிராக போர் தொடுத்தார். ஆனால், இரண்டாம் புதனகேசிளனன் ஐஹோலே கல்வெட்டுப்படி ஹர்ஷரை புலிகேசி முறியடித்தார் என அறிகிறோம். இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான். யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளும் புலிகேசியின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.
சுதந்திர அரசாக இருந்த சிந்துப்பகுதி மீது ஹர்ஷர் தமது அடுத்த படையெடுப்பை மேற்கொண்டார். ஆனால், அவரது சிந்துப் படையெடுப்பின் வெற்றி குறித்து சரியான தகவல்கள் இல்லை. நேபாளம் ஹர்ஷரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. காஷ்மீர் ஆட்சியாளர் தவறாது கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷர் இணக்கமான உறவைக் கொண்டிருந்தார். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷரது இறுதியான போர் நடவடிக்கையாகும்.
தமது படையெடுப்புகளின் பயனாக, ஹர்ஷர் வடஇந்தியா முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். தற்காலத்திய ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் அவரது ஆதிக்க எல்லை இன்னும் விரிவடைந்திருந்தது. எல்லைப்புற அரசுகளான காஷ்மீர், சிந்து, வாலாபி, காமரூபம் ஆகியன அவரது இறையாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.
ஹர்ஷரும் புத்த சமயமும்
யுவான் சுவாங்
தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக விளங்கிய ஹர்ஷர். பின்னர் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவரை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். தனது அரசுக்குள் புலால் உணவை ஹர்ஷர் தடைசெய்தார். உயிர்வதை செய்வோரை அவர் தண்டித்தார். தனது அரசு முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளையும் பயணிகள் தங்குமிடங்களையும் அவர் அமைத்தார். புத்தசமய புனித இடங்களில் மடாலயங்களை அவர் நிறுவினார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து சமயங்களின் பிரதிநிதிகளையும் கூட்டி அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து மரியாதை செய்தார். புத்தசமய துறவிகளை ஒன்றாக அமரச்செய்து புத்தசமயக் கோட்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும்படி செய்தார்.