மேய்ச்சல் நில மக்களாக விளங்கிய ரிக்வேத காலமக்களின் முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பாகும். கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களது செல்வம் மதிப்பிடப்பட்டது. வடஇந்தியாவில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கிய பின்னர் வேளாண் தொழிலை மேற்கொண்டனர். இரும்பின் பயனை நன்குணர்ந்திருந்த அவர்களால் வெகு எளிதாக காடுகளை திருத்தி பரவலான விளை நிலங்களை உருவாக்க முடிந்தது. மற்றொரு முக்கியத் தொழில் தச்சுவேலை. காடுகளை அழிக்கும்போது கிடைத்த ஏராளமான மரங்களால் இத்தொழில் பெரிதும் பயன்பெற்றது. தேர்கள், கலப்பைகள் போன்றவற்றை தச்சர்கள் உற்பத்தி செய்தனர். உலோகக் கலைஞர்கள் செம்பு, வெண்கலம் மற்றும் இரும்பாலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்தனர். நூல் நூற்றல் மற்றொரு முக்கிய தொழிலாகும். பருத்தி மற்றும் கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. பொற்கொல்லர்கள் ஆபரணங்களையும், குயவர்கள் வீட்டு உபயோகத்திற்கான மண்பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர்.
வணிகம் மிகமுக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். நதிகள் போக்குவரத்துக்கு பெரிதும் உதவின. பண்டமாற்று முறையிலேயே வணிகம் நடைபெற்றது. காலப்போக்கில் 'நிஷ்கம்' என்ற தங்க நாணயங்கள் பெரும் வர்த்தகங்களில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன.
சமயம்
நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக்வேத கால மக்கள் வழிபட்டனர். இவற்றை கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். பிருதிவி (பூமி), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடிமின்னல்) ஆகிய கடவுளர்கள் ரிக்வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர். முந்தைய வேத காலத்தில் இந்திரன் மிகவும் புகழ்பெற்று விளங்கினான். இந்திரனுக்கு அடுத்த நிலையில் இருந்த அக்னி கடவுளருக்கும் மனிதருக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்தார், இயற்கைச் சமநிலையை பாதுகாக்கும் கடவுளாக வருணன் விளங்கினார். ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபடப்பட்டனர். ஆலயங்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை. நற்பயன்களை எதிர்பார்த்து கடவுளருக்கு வழிபாடுகள் செய்யப்பட்டன. நெய், பால், தானியம் போன்றவை படைக்கப்பட்டன. வழிபாட்டின்போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.