4. கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறை முகங்களை ஆங்கிலேயர் பெற்றிருந்தனர். பிரஞ்சுக்காரர்களிடம் பாண்டிச்சேரி மட்டுமே இருந்தது.
5 பிரஞ்சு தளபதிகளிடம் ஒற்றுமையில்லை.
6. ஐரோப்பியப் போர்களில் இங்கிலாந்து பெற்ற வெற்றி இந்தியாவில் பிரஞ்சுக்காரரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமைந்தது.
வங்காளத்தில் ஆங்கிலேய ஆதிக்கம் நிறுவப்படுதல்
ராபர்ட் கிளைவ்
இந்தியாவில் வளமிக்க செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக வங்காளம் திகழ்ந்தது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி பரவுவதற்கு, வங்காளத்தில் அவாகள் ஏற்படுத்திய ஆதிக்கமே அடிப்படையாக அமைந்தது. வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே தொடங்கிய பூசல் 1757ஆம் ஆண்டு ஜூன் 23ம் நாள் நடைபெற்ற பிளாசிப்போரில் முடிந்தது. பிரிட்டிஷ் துருப்புக்களின் தளபதியான ராபர்ட் கிளைவ் நவாப்பின் படைகளை முறியடித்து வெற்றி வீரராக எழுச்சி பெற்றார். நவாப்பின் படைத்தளபதியான மீர்ஜாபரின் துரோகச் செயலே ஆங்கிலேயரின் எளிதான வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இருப்பினும், பிளாசிப் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிறுவப்பட்டதைக் குறிப்பதாக அமைந்தது.
1764 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் ஒரு முறை அயோத்தி நவாப், முகலாயப் பேரரசர், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டுப்படைகளை பக்சார் போரில் முறியடித்தனர். ஆங்கிலேயரின் படைவலிமை முடிவாக நிலைநிறுத்தப்பட்டது. 1765ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆளுநராக ராபர்ட் கிளைவ் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அலகாபாத் உடன்படிக்கையும் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழவிற்கு முகலாயப் பேரரசர் திவானி உரிமைகளை வழங்கினார். இவ்வாறு, இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் நன்கு நிலை நாட்டப்பட்டது.