சமூகக் கொள்கைகளும் சட்டங்களும்
தொடக்கத்தில், ஆங்கிலேயரின் கவனம் வாணிபத்தைப் பெருக்குவதிலும் பொருளாதாரத்தை சுரண்டி அதிக லாபம் ஈட்டுவதிலுமே இருந்தது. ஆகவே, சமூக, சமய சீர்திருத்தங்களில் அவர்கள் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. மேலும், இந்தியர்களின் சமூக, சமய பழக்கங்களிலும் அமைப்புகளிலும் தலையிட்டால் தங்களது வணிக நலன்கள் பாதிக்கப்படலாம் என அவர்கள் அஞ்சினர். எனவே, மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இந்திய சமூகப் பிரச்சினைகளில் பாராமுகத்துடனும் இருந்தனர்.
அதே சமயம், இந்தியர்களின் பழக்க வழக்கங்களை விமர்சித்து வந்ததன் மூலம், இந்தியர்களிடையே ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் அவர்கள் உருவாக்கினர் என்றும் கூறலாம்.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவில் தோன்றிய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் வணிகக்குழு ஆட்சியின் கவனத்தை ஈர்த்தன. கிறித்துவ சமயப்பரப்பாளர்களின் பிரச்சாரம் படித்த இந்தியர்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. மேலை நாட்டு கருத்துக்களும் கல்வியும் செய்தித்தாள்கள் மூலமாக சென்றடைந்து பொது மக்களிடையே போதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வில்லியம் பெண்டிங் பிரபு போன்ற ஒரு சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தங்களது தனிப்பட்ட கவனத்தை இதில் செலுத்தினர். குறிப்பாக, பெண் விடுதலை குறித்தும் ஜாதிப்பாகுபாடு குறித்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன.