இறைவனை உணர்வதற்கு அன்பும் பக்தியுமே சிறந்த வழிகள் என்று சூஃபிக்கருத்துகள் வலியுறுத்துகின்றன. மனித குலத்தின் மீது அன்பு காட்டுவதன் மூலமே கடவுள்மீது அன்பு செலுத்த முடியும். எனவே, மனித குலத்திற்கு சேவை செய்வதன்மூலமே கடவுளுக்கு சேவையாற்ற முடியும் என சூஃபிகள் நம்பினர். கடவுள் பற்றி அறிந்து கொள்ள சுய ஒழுக்கம் மிகவும் வலியுறுத்தப்பட்டது. வைதீக முஸ்லிம்கள் புற ஒழுக்கத்தை வலியுறுத்திய வேளையில், குஃபிகள் அக ஒழுக்கத்தின் பயனை எடுத்துரைத்தனர்.
சூஃபி இயக்கம்
சடங்குகளை நம்பியிருந்த வைதீக முஸ்லீம்களுக்கு பதிலாக சூஃபிகள் அன்பும் பக்தியுமே முக்திக்கு வழிகள் என உரைத்தனர். ஆன்மீக வளர்ச்சிக்கு குருவின் வழிகாட்டுதல் முக்கியம் என சூஃபிக்கள் கூறினர். சகிப்புத்தன்மையும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. தியானம், நற்செயல்கள், பாவங்களுக்கு வருந்துதல், வழிபாடு நடத்துதல், புனிதப்பயணங்களை மேற்கொள்ளுதல், தானங்களை செய்தல், துறவிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி ஆசைகளைத் துறத்தல் போன்ற கருத்துக்களும் சூஃபித் துறவிகளால் எடுத்துரைக்கப்பட்டன.
இத்தகைய வைதீகத்தன்மையற்ற தாராளக் கருத்துக்கள் அடங்கிய சூஃபிதத்துவம் பக்தி இயக்கப் பெரியார்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. பிற்காலத்தில், முகலாயப் பேரரசர் அக்பர் சூஃபிக் கோட்பாடுகளைப் பாராட்டினார். அவரது சமய நோக்கு மற்றும் சமயக்கொள்கைகளையும் அவை உருவாக்கின. சூஃபி இயக்கம் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த அதே வேளையில் இந்துக்களிடையே பக்தி இயக்கம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அன்பு மற்றும் சுயநலம் கலவாத பக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இவ்விரு இயக்கங்களும் இரண்டு வகுப்பினரின் ஒற்றுமைக்கும் வழிவகுத்தன.