அவர்கள் ஒரு நாள் சில தைரியமான பெண்களை அழைத்துக்கொண்டு ஒரு கணவாய் வழியாக மலையைக் கடந்து தெற்கு திசை நோக்கிச் சென்று விட்டனர். இங்குமங்கும் ஒளிந்திருந்து உயிர்ப் பிச்சை கேட்ட புருகுலக் குழந்தைகள், விருத்தர், பெண்கள் இவர்களைக் குருகுல வீரர்கள் பிடித்தனர். அந்தக் காலத்து முறைப்படி, கைது செய்வது கூடாதாகையால், குழந்தைகள் முதல் விருத்தர் வரை எல்லா ஆண் உருவங்களையும் கொன்று விட்டனர். பெண்களை தங்களோடு அழைத்துக் கொண்டனர். இம் மங்கையரைப் போல, புரு குலத்தோருடைய ஆடுமாடுகள், குதிரைகள் முதலிய உடைமைகளும் இவர்களுக்குச் சொந்தமாகி விட்டன. இப்பொழுது இந்த நதிக்கரையிலிருந்து மலையின் உச்சி வரை குருகுலத்தோரின் பிரதேசமாகி விட்டது. பிடித்து வரப்பட்ட புருகுலப் பெண்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, குருகுலத் தலைவன் ஒரு தலை முறை வரை பலதார மணத்தை அனுமதித்து ஒரு சட்டம் செய்தான். அன்றுதான் முதன்முதலாக குரு குலத்தில் பலதார மணம் அமுலுக்கு வந்தது.
* இன்றைக்கு இருநூறு தலைமுறைகளுக்கு முந்திய, ஒரு ஆரிய குலத்துக் கதை இது. அந்தக் காலத்தில் ஈரான் வெள்ளை ஜாதி இனத்தவரும், இந்தியரும் சேர்ந்த ஒரு குலம் இருந்தது. இரண்டும் கலந்த இந்த குலத்திற்கு, ஆரியர், ஆரிய குலம் என்று பெயர். ஆடுமாடுகள். குதிரைகள் இவற்றைப் பரிபாலிப்பது இவர்களுடைய வாழ்க்கைக்கு முக்கியத் தொழிலாக இருந்தது.