குரு குலத்தவரின் பலம் பெருகி விட்டது. புருகுலத்தார் கேவலமாக
மடியத் தொடங்கினர். மோசமான நிலைமையைப் பார்த்து மிருகங்களுக்குக் காவலாய் நின்றவர்களும் துணைக்கு வந்தனர். ஆனால் இதே சமயத்தில் மேலும் நாற்பது குரு-குல யுவ யுவதிகளோடு, மதுரா யுத்தகளத்தை அடைந்தாள். கடும் போர் நடந்தது. புரு குலத்தோரில் அநேகர் ரணகளத்திற்குப் பலியாயினர். பாக்கியிருந்தோர் உயிர் தப்பி ஓடினர். காயம் பட்டுக் கிடந்த எதிரிகளையும் கொன்று குவித்த குருகுலத்தோர் புருகுலத்தோரின் கிராமத்தை நோக்கி விரைந்தனர். அந்தக் கிராமம் அங்கிருந்து கிட்டத்தட்ட ஆறு மைல் தூரத்தில் மலைமேல் இருந்தது. அங்கு சென்ற குருகுலத்தோர், கிராமமே காலியாயிருப்பதைக் கண்டனர். ஜனங்கள் எல்லாரும் கூடாரங்களை விட்டு விட்டு ஓடிப்போயிருந்தனர். அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் ஆங்காங்கு மேய்ந்து கொண்டிருந்தன. ஆனால் குரு- குலத்தோருக்கு எதிரிகளை விரட்டித் தாக்குவதிலேயே கவனமெல்லாம் சென்றது. புருகுலத்தோர் நன்றாக வளைக் கப்பட்டிருந்தார்கள். ஏனெனில் தப்பி உயர ஓடுவதும் எளிதாயில்லை. உயரப் போகப்போக ஆபத்தாயும், மலை ஏற்றம் கடினமாயும் இருந்தது. இருந்தாலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஆண்களும் பெண்களும் குதிரை மீதேறி ஓடிக் கொண்டிருந்தனர். கடைசியில் குதிரை செல்ல முடியாத இடங்களும் வந்து விட்டன. ஆகவே குதிரையை விட்டு இறங்கிக் கால் நடையாக நடக்க ஆரம்பித்தனர். குருகுலத்தோரும் அவர்களை விரட்டிக் கொண்டே வந்தனர்; குழந்தைகள், விருத்தர்கள், பெண்கள் இவர்களால் மலைமீது ஏற முடியவில்லை. ஆகவே இவர்கள் தப்பித்துக் கொள்ளச் சந்தர்ப்பம்
கொடுப்பதற்காக, சில புருகுல வீரர்கள் ஒரு குறுகிய வழியில் எதிரிகளைத் தடுத்து நின்றனர்; குருகுல வீரர்களும் தங்களுடைய முழுப் பலத்தையும் உபயோகித்துத் தாக்க இடவசதி இன்மையால் புருக்களை அங்கிருந்து ஒழிப்பதற்குச் சிறிது நேரமாயிற்று.
இப்போது இரு தரப்பாரும் குதிரையை உபயோகிக்க முடியவில்லை. ஆனால் புருகுலத்தில் மிஞ்சியிருந்த ஆடவர்கள் ஒரு டஜனிருக்கலாம். ஆகவே அவர்கள் தங்கள் சமூகத்தைச் சில நாட்கள் கூடக் காப்பாற்ற முடியவில்லை.