1
“மகாராஜா! உங்களுக்குக் கவலை வேண்டாம். நமது சித்த குருதேவர், ஒரு புதிய சாதனையை ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலம், சூறைக் காற்றிலே பறக்கும் உலர்ந்த சருகுகளைப் போல, துருக்க சேனை பறந்து போய்விடும்.”
“குருதேவர் மித்ரபாதர் (ஜகன்மித்ரானந்தர்) என்மீது மிகுந்த கருணை
உடையவர். எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கஷ்டங்கள் ஏற்படும் பொழுதெல்லாம், நமது குரு மகராஜ் தமது திவ்யபலத்தால் காப்பாற்றி வருகிறார்.”
“மகராஜ்! குருதேவர் ஹிமாலயத்திற்கு அந்தப் பக்கத்திலே பூட்டான் தேசத்தில் இருந்து கொண்டே, கன்னிய குப்ஜத்திற்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்து கொண்டார். அதற்காகவே என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்தார்.”
“அவருக்கு எவ்வளவு கிருபை என் மீது?”
“தாரிணி (தாராதேவி) மகாராஜாவிற்கு உதவி செய்வாள். துருக்கர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்.”
“தாரா மாதாவிடம் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. தாரிணி! அபயரஷணா! தாயே! மிலேச்சர்களிடமிருந்து எங்களைக் காத்தருள்.”
கிழ அரசன் ஜெயசந்திரன் இந்திரபவனம் போன்ற தனது ராஜ மாளிகையிலே, பளிங்கு போன்ற ஒரு வெள்ளை மெத்தையின் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்திலே, அழகே வடிவெடுத்த இளமை ததும்பும் ராணியர் நால்வர் உட்கார்ந்திருந்தனர். அவர்களின் கரிய கூந்தல், பின்புறத்தில் மற்றொரு தலையிருப்பது போல் சுருட்டி முடியப்பட்டிருந்தது. சூடாமணி, காதுக்குண்டலம், கங்கணம், முத்தாரம், மணியாரம், இடுப்பு ஒட்டியாணம், நூபுரம் முதலான விதவிதமாக அவர்கள் அணிந்திருந்த தங்க ரத்தின ஆபரணங்கள், அவர்களை விட அதிக எடையுள்ளதாய் இருந்தன. மிக மெல்லிய சேலையையும் ரவிக்கையையும்
அணிந்திருந்தார்கள். ஆனால், அவைகள் அவர்களின் அவயவங்களை மறைப்பதற்காக அல்ல; அதிகமாக எடுத்துக் காட்டுவதற்காகவே என்று தோன்றிற்று. ஸ்தனங்களின் பருமனையும் பளபளப்பையும் அழகிய முறையிலே எடுத்துக் காட்டுவதற்கேற்ப அமைந்திருந்தது ரவிக்கை. அதற்குக் கீழே வயிறு வரை உள்ள சரீரம் மறைக்கப்படாமலேயே இருந்தது. சேலை, உடலின் உருவ அமைப்பையும் நிறத்தையும் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது. அவர்களின் கூந்தலிலே பூசப்பட்டிருந்த வாசனைத் தைலமும், சூடியிருந்த புது மலர்களும், அந்த மாளிகையை