இஸ்லாத்தின் தலைமை அதிகாரிகள், நீண்ட காலம் வரை தங்களைக் ‘கலிபா’ அதாவது இஸ்லாத்தைத் தோற்றுவித்தவரின் வாரிசுதாரர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாயினும், உண்மையில் அவர்கள் ‘சுல்தான்’ (அரசன்)களாகவே இருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் பகிரங்கமாகவே தங்களைச் சுல்தான்கள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தின் புனிதமான கூட்டுக் குடும்ப வாழ்வு பற்றியோ, அதன் எளிமை, சமத்துவம் சகோதரத்துவம் பற்றியோ எவ்விதக் கவலையும் கிடையாது. ஆனால், புதிய தேசங்களை ஜெயிப்பதற்குக் கத்தியெடுத்துப் போராடும் சிப்பாய்கள் தேவை. அந்தச் சிப்பாய்களில் இப்பொழுது அரேபியர் மட்டுமல்ல, அரேபியர் அல்லாதாரும் இருந்தனர். இந்தச் சிப்பாய்களைச் சுல்தானுக்காகச் சண்டையிடச் செய்வது அத்தனை சுலபமல்ல. ஆகவே, சுவர்க்கத்தில் கிடைக்கப் போகும் பலனைப்பற்றி ஆசை ஊட்டியதோடு, இந்த உலகத்தில் கிடைக்கும் பலனிலும் அவர்களைப் பங்குதாரர்களாக்கினார்கள். ஜெயித்த நாட்டிலே கிடைக்கும் கொள்ளையிலும், பிடிபடும் கைதிகளிலும், சிப்பாய்களுக்கும் பங்குண்டு. வெற்றி பெற்ற பூமியிலே சுதந்திரமாகக் குடியேறும் உரிமை அவர்களுக்குண்டு. ஒரு புதிய பிரதேசத்தை வென்றதும் தனது பழைய பிடிப்புகளிலிருந்தும் பழைய எஜமான்களிடத்திலிருந்தும் அவர்களுக்குப் பூரண விடுதலையுண்டு. இம்மாதிரி ஏற்பாடுகளால், தோல்வியடைந்த நாட்டிலிருந்து ஏராளமான மக்களை ஜெயித்தவர்கள் தங்கள் ராணுவத்திலே சேர்த்துக் கொண்டு முன்னேற முடிந்தது. தோற்றவர்களிடை
இருந்தே, ஜெயித்தவர்கள் தங்களுக்காகப் போராடும் சேனையைத் தயாரிக்க முடியுமானால் அவர்களை எதிர்த்து நின்று வெற்றி கொள்ள யாரால் முடியும்?”
ஹர்ஷன் இறந்து நூறு வருடங்களுக்குள்ளேயே சிந்து பிரதேசம் இஸ்லாமிய ஆட்சியில் வந்துவிட்டது. காசி, சோமநாதம் (குஜரத்) வரையுள்ள இந்திய மக்கள் இஸ்லாமிய வாளின் பலத்தை உணரச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் புதிய ஆபத்திலிருந்து தப்புவதற்காக, புதிய வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால் ஹிந்துக்கள் தங்கள் பழைய பாதைகளிலிருந்து விலகத் தயாராயில்லை. தேசம் முழுவதும் ஒன்று சேர்ந்து எதிரியைத் தடுக்க முயற்சி செய்யாமல், கைப்பிடியில் அடங்கக் கூடிய ராஜபுத்ரர்களில் (பழைய க்ஷத்திரியர்கள், அவர்களோடு கொள்வினை கொடுப்பினையால் கலந்துவிட்ட சகரர்கள், கிரேக்கர்கள் கூர்ஜரர்கள் முதலியவர்கள் சேர்ந்த பாரத