காமரூபத் (அஸ்ஸாம்)திலிருந்து சௌராஷ்டிரம் (கத்தியவார்) வரை, ஹிமாலயத்திலிருந்து விந்திய மலைத் தொடர்வரை, பரந்து கிடக்கும் பெரிய பூப்பிரதேசத்திலே நான் நிர்வாக நியாயத்தின் ஆட்சியை ஸ்தாபித்தேன். எனது நிர்வாக அதிகாரிகள், ஜனங்களைத் துன்புறுத்தாமலும், கொடுமை செய்யாமலும் இருக்க வேண்டும்மென்பதற்காக, நானே அடிக்கடி சுற்றுப் பிரயாணங்கள் செய்து மேற்பார்வை செய்தேன். இப்படி ஓரு பிரயாணத்தில் தான் ஒரு கிராமத்திலே பாணபட்டனைச் சந்தித்து என்னுடன் அழைத்து வந்தேன். அவன் என் புகழைப் பெருக்க வேண்டுமென்று விரும்பி எனது யாத்திரைகளைப் பெரிய ராஜ படாதோபத்தோடு வருணித்திருக்கிறான். உண்மையில் அந்தப் படாடோபங்கள் என்னுடையவை அல்ல. யாரோ ஒரு விக்கிரமாதித்தியனுடையவையாய் இருக்கலாம்; என்னுடைய வாழ்க்கை வரலாற்றை (ஹர்ஷசரிதம்) அவன் எனக்குத் தெரியாமல் மறைவாகவே எழுதிக் கொண்டிருந்தான். அந்த விஷயம் தெரிந்து ஒரு நாள் கேட்டபொழுது, அவன் எழுதியிருந்த பகுதியை எனக்குக் கொண்டு வந்து காட்டினான். நான் அதை விரும்பவில்லை. இந்த முயற்சிக்காக அவனைக் கண்டிக்கவும் செய்தேன். எனது கண்டிப்புக்காக அவன் அந்த வேலையை முற்றிலும் நிறுத்தி விடாவிட்டாலும் மேலே அத்தனை உற்சாகத்தோடு அவனால் எழுத முடியவில்லை. அவனுடைய ‘காதம்பரி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதில் அரசதர்பாரையும், அந்தப்புரத்தையும், மாளிகையையும், வேலைக்காரர்களின் நிலைமையையும், சுக சௌக்கியத்தையும் அவன் வர்ணித்திருப்பதைப் பார்த்து ஜனங்கள், அவை யாவும் என்னுடைய அரண்மனையையும், என்னுடைய வாழ்க்கையையும்
பற்றியவை என்று தவறாகக் கருதுவார்கள். நான் என்னுடைய பாரசீக ராணியை மிகவும் விரும்பினேன். அவள் நௌஷர்வானின் பேத்தி என்பது மட்டுமல்ல, அவளுடைய அழகினாலும், தகுதியானாலும் எந்த ஆடவனையும் மயக்கும் சக்தி வாய்ந்தவள். பாணகவி, அவளை ‘மகாஸ்வேதா’ என்ற பெயரால் வருணித்திருக்கிறான். என்னுடைய சௌராஷ்டிர ராணி எனக்குக் கொஞ்சம் வயதான பிறகு வந்தாள். ஆகவே, அவள் மன மகிழ்ச்சியடைவதற்காக அவளுடைய வாசஸ்தலத்தை அலங்கரிப்பதிலே சிறிது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. அவளைத்தான் பாணகவி “காதம்பரி” என்றும் அவளுடைய வாசஸ்தலத்தை அழகு மாளிகையாகவும் வருணித்திருக்கிறாள். அவனு
____________________________________________________
*மனித வாழ்க்கையை நான்கு பருவங்களாகப் பிரிப்பது ஆரிய மரபு ;- 1.பிரம்மச்சரியம், 2. கிருஹஸ்தம், 3. வானப் பிரஸ்தம், 4. சந்யாசம்.