கிறார்கள். இந்த ஆசை வலை மிகச் சக்தி வாய்ந்தது. பௌத்த குடும்பஸ்தர்கள் பலரையும் கூட இழுத்துப் பிடித்துவிடுகிறது. இவ்விதம் பிளவுகளின் மூலம் ஜனங்களின் சக்தியைச் சின்னாபின்னப்படுத்தி அரசின் சக்தியையும் பிராமணர்களின் சக்தியையும் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், இதன் விளைவு மிக அபாயகரமானதாய் இருக்கும். அடிமைகளின் பலத்தைக் கொண்டு ஒரு தேசம் சக்திசாலியாய் இருக்க முடியாது” என்று கூறினார்.
நான் யௌதேயர்களின் ஆத்ம தியாகத்தைப் பற்றிக் கூறிய பொழுது, அவர் மனம் மிகவும் இளகிவிட்டது. மறுபடியும் யௌதேயர்களின் ஜன ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது ஆசையை வெளியிட்டதும், “என்னுடைய நல்லெண்ணமும், ஆசீர்வாதமும் உனக்கு எப்பொழுதும் உண்டு. ஏற்படும் தடைகளைக் கண்டு, ஓர் ஆண்மகன் பயப்படக்கூடாது” என்று கூறினார். அவருடைய ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டு. யௌதேயர்களின் பூமியை நோக்கிச் செல்கிறேன். மாண்டு கிடக்கும் அந்தப் பூமிக்குப் புத்துயிர் அளிப்பேனா, அல்லது மண்ணிலே பட்ட கால் சுவடுபோல் மறைந்தொழிவேனோ?