“நான் தான் சொன்னேனே, அவன் பிரவாஹனின் பக்கா சிஷ்யனென்று. பார்த்தாயா அவனுடைய பிர்மவாதத்தை? நீ தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய். கிட்ட நெருங்கிப் பார்த்தால், அப்பொழுது உனக்கு உண்மை தெரியும்.”
“நான் மேலே கேள்வி கேட்டிருந்தால் என் தலை அறுந்து விழுந்து விடுமென்று நீ உண்மையிலேயே நம்புகிறாயா?”
“ஆம்; நிச்சயமாக. யக்ஞவல்க்கீயனுடைய பிர்ம சக்தியினாலல்ல; உலகத்தில் எத்தனையோ பேருடைய தலை சப்தமின்றி வெட்டி விழுத்தாட்டப்படுவதைப் போல.”
“என் தலை சுழல்கிறது பாட்டி!”
“உனக்கு இன்று தலை சுற்றுகிறது. எனக்கோ அறிவு தெரிந்த நாள் முதல், தலை சுற்றிக் கொண்டிருக்கிறது. எல்லாம் வேஷம்; யாவும் வஞ்சனை; மக்களின் உழைப்பின் பயனைச் சுரண்டிச் சாப்பிடுவதற்குச் செய்த வழிகள். இந்த அரச பதவி, பிராமண பதவி, வேள்வி, பிர்மவாதம் எல்லாம் மக்கள்
தானே உணராதவரை, யாரும் அவர்களுக்கு உணர்த்த முடியாது. அவர்கள் தானே உணரும்படி, அந்த சுயநலக்காரர்கள் விடமாட்டார்கள்.”
“இந்தச் சூழ்ச்சிகளிலே வெறுப்பு ஏற்படும்படி மனித இதயம் தூண்டாதா பாட்டி?”
“தூண்டும், அந்த ஒரே ஒரு நம்பிக்கைதான் எனக்கிருக்கிறது மகளே!”
____________________________________________________
*இன்றைக்கு 108 தலைமுறைகளுக்கு முந்திய கதை இது. அப்பொழுது தான் வேதத்தின் உபபாகமான உபநிஷதங்கள், பிர்மஞானம் இவைகள் உற்பத்தியாயின. அந்தக் காலத்தில் இரும்பு ஆயுதங்களின் உபயோகமும் நந்தவனங்கள், தோட்டங்கள் அமைப்பதும் பாரத நாட்டிலே பரவத் தொடங்கின.