“நீ எதிர்பார்த்திருக்க மாட்டாய் மகளே! ஆனால் இவைகள் எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். யக்ஞவல்க்கீயன், பிரவாஹனின் சரியான சிஷ்யன் என்பதை நிரூபித்து விட்டான். பிரவாஹனுடைய இந்தப் பொய்த் தத்துவத்தைப் பூரணத்துவம் அடையச் செய்துவிட்டான். நீ மேலே கேள்வி கேட்காதது நல்லதாய்ப் போய்விட்டது மகளே!”
“ஏன்? நான் மேலே கேள்வி கேட்கவில்லை என்பது உனக்கெப்படித் தெரிந்தது?”
“எப்படியா? உன் கழுத்தின் மீது தலையிருப்பதை நான் பார்க்கிறேன் அல்லவா?”
“என்ன? நான் மேலே கேள்வி கேட்டிருந்தால் என் தலை அறுந்து விழுந்து விடுமென்று, நீயும் நம்புகிறாயா பாட்டி?”
“நிச்சயமாக! ஆனால், யக்ஞவல்க்கீயனுடைய பிர்மபலத்தினால்
அல்ல; சாதாரணமாக மனிதர்களின் தலை அறுந்து விழுவது போல,”
“இருக்காது பாட்டி!”
“கார்க்கி! நீ இன்னும் குழந்தை. பிர்மவாதம் மனத்தின் கற்பனையென்றும் அறிவுப் போட்டி என்றும் நீ நினைக்கிறாய். இல்லை மகளே! அந்தப் பிரமவாதத்திற்குப் பின்னே பெரிய பெரிய அரசர்களுடையவும், பிராமணர்களுடையவும் சுயநலம் மறைந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிர்மவாதம் பிறந்தபொழுது அதைத் தோற்றுவித்தவன் எனக்குப் பக்கத்திலே படுத்துக் கொண்டிருந்தான். அரச பதவியையும், புரோகித பதவியையும் காப்பாற்றுவதற்கு, இது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இரும்பால் செய்யப்பட்ட வாளாயுதத்தைப் போல் உறுதியுடையது என்று இதை வருணிப்பான் பிரவாஹன்.”
“பாட்டி! நான் அப்படிக் கருதவில்லையே?”
“நீ மட்டுமா? எல்லோருந்தான் அதைச் சரியாக உணரவில்லை. ஜனகனைப் போன்ற மகா ஞானிகள் கூட இந்த உபநிஷதத்தின் ரகசியத்தைப் புரிந்து கொள்ளவில்லையே? ஆனால், யக்ஞவல்க்கீயன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறான். என் கணவன் பிரவாஹனைப் போல் சரியாகப் புரிந்து கொண்டவன் அவன் ஒருவன்தான். தேவதைகள், தேவலோகம், பிதுர்லோகம், வேள்வி, பிர்மவாதம் எதிலும் என் கணவனுக்கு நம்பிக்கை கிடையாது. அவனுடைய நம்பிக்கையெல்லாம், போக வாழ்க்கையில்தான். அவன் வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியையும் போக வாழ்விற்காகவே
செலவழித்தான். அவன் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, விசுவாமித்திர குலத்தைச் சேர்ந்த புரோகிதரின் இளங்குமரி அந்தப்புரத்திற்கு வந்தாள். தான் பிழைக்க முடியாது என்று தெரிந்திருந்தும், அந்த அழகிய யுவதியைத் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டான்.”
“விதேக அரசன் கொடுத்த பசுக்களை எல்லாம், யக்ஞவல்க்கீயன்